சசிகலாவை விட பன்னீர் செல்வம் பரவாயில்லை! – சீமான்

seemanமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக சசிகலா மீது புகார் சொல்லியிருக்கிறார். மிரட்டியதால் தான் இப்படி சொல்லியிருக்கிறார். இவரை மட்டுமல்ல பலபேரை சசிகலா தரப்பு மிரட்டியுள்ளது. இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

இது தொடர்பாக சீமான் மேலும் கூறியதாவது.

உதாரணமாக கங்கை அமரனை கூட மிரட்டியதாக அவர் பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருக்கிறார். இது உட்கட்சி பிரச்சினை என்று நினைத்துவிடக்கூடாது. இது நம் நாட்டின் பிரச்சினை.

மிச்சம் இருக்கும் நான்கு வருடத்தை யார் ஆட்சி செய்யப் போகிறோம் என்ற நிலைப்பாட்டில் தான் இந்த பிரச்சினைகள் நிலவுகிறது. இதற்காக நம் மக்கள் அனைவரும் இப்பிரச்சினையில் தலையிடுவது அவர்களது உரிமை.

முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக தான் இந்த அவசரமே. முன்னாள் முதல்வர் ஜெ இறப்பில் பல்வேறு சந்தேகம் இருக்கிறது அதை தெளிவுபடுத்தவேண்டிய இடத்தில் இருக்கிறார் சசிகலா. அதை தெளிவுபடுத்தாமல் முதல்வராக அவசரப்படுகிறார்.

தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா என யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படப் போவதில்லை.

வர்தா புயல் ஏற்பட்ட போது இரவு நேரத்தில் அமைச்சர்களோடு களத்தில் போய் நின்றார் பன்னீர்செல்வம். ஆனால் சசிகலாவும், ஸ்டாலினும் அங்கு செல்வதாக இருந்தால் மேக்கப் போட்டுக்கொண்டு தான் வருவார்கள்.

இவர்கள் வருவதாக இருந்தால் கொடி பிடிக்க வேண்டும். வரிசையாக நின்று கும்பிட வேண்டும். கோஷம் போட வேண்டும்.

இப்போதுள்ள சூழ்நிலையில் சசிகலாவை விட பன்னீர் செல்வம் பரவாயில்லை என்று தான் சொல்வேன்.

ஜெயலலிதா இறந்த சம்பவம்,வர்தா புயல்,கடலில் கச்சாய் எண்ணெய் கொட்டியது என பல நெருக்கடியான சூழ்நிலையில் கூட தனிமனிதனாக சிறப்பாக செயல்பட்டார் பன்னீர்செல்வம்.

தமிழக அரசின் பொருளாதார நிலையை பார்க்கும் போது இன்னொரு தேர்தல் தேவையில்லை. அதற்காக பன்னீர்செல்வம் சிறப்பா ஆட்சி செஞ்சிடுவார்னு சொல்ல வரல.

சசிகலாவோடு இவரை ஒப்பிட்டு பார்க்கும் போது அவரை விட இவர் பரவாயில்லை என்று நினைக்கிறேன்ப

ன்னீர்செல்வத்தை பி.ஜே.பி. இயக்குவதாக சொல்வது சுத்த பைத்தியகாரத்தனம். நாட்டு பிரச்சினையை பார்க்காமல் யார் யாரை இயக்குகிறார்கள் என்று பார்ப்பதே தவறு.

அப்படி பார்த்தால் சசிகலாவின் பின்னணியில் சுப்பிரமணியன் சுவாமி இருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படியென்றால் சசிகலாவை முன்னிலை படுத்துகிறது பி.ஜே.பி. என்று சொல்லமுடியுமா ?

அவன் அடுத்த எதிரி அதை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.

இதேபோல் தி.மு.க. இயக்குவதாக சொல்வதும் சுத்த அபத்தம்.எல்லா எம்.எல்.ஏக்களும் சசிகலாவை ஆதரிக்கிறார்கள் என்று சொல்லும்போது, ஏன் அவர்களை சிறை வைக்க வேண்டும்.

உங்கள் எம்.எல்.ஏக்கள் மீதே நம்பிக்கை இல்லாமல் இருக்கிறீர்கள் என்றால், உங்களை மக்கள் எப்படி நம்புவார்கள்.

மறுபுறம் சசிகலாவின் மீதுள்ள கோபத்தில் தீபா அரசியலுக்கு வருவதாக சொல்கிறார். இவருக்கு என்ன கொள்கை, கோட்பாடு இருக்கிறது. இவர் தமிழ்நாட்டின் சாபக்கேடு என்று தான் நினைக்கிறேன் என்றார்.

– Vikatan

TAGS: