தமிழக மக்கள் போராட்டத்தை மதிக்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டது மத்திய அரசு!

neduvasalடெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் எதிர்ப்புகள் உள்ள போதிலும் அதை கண்டுக் கொள்ளாமல் அந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து 22 நிறுவனங்களுடன் இன்று மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

நெடுவாசலில் மட்டும் மக்களின் சந்தேகங்களை தீர்த்தப்பின்னர் திட்டப்பணிகள் தொடங்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக மத்திய அரசு கடந்த மாதம் 14-ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடக்காடு உள்ளிட்ட 70 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பணிகளை விடுத்து இந்த போராட்டத்தில் முழு கவனம் செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

தமிழிசை, பொன்னார்

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு மேற்கொள்ளாது என்று தமிழிசை சௌந்தரராஜனும், பொன்.ராதாகிருஷ்ணனும் உறுதி அளித்தனர். அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் விவசாயத்தை அழித்து செயல்படுத்தும் எந்த ஒரு திட்டமும் அனுமதிக்கப்படாது என்றார்.

உறுதியான நாராயணசாமி

தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்தும் கண்டுகொள்ளாமல் இருந்ததாக பல்வேறு விமர்சனங்களுக்காளான பின்னரே முதல்வர் எடப்பாடி இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினார். ஆனால் புதுவை முதல்வர் நாராயணசாமியோ ஆரம்ப கால முதலே இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

31 இடங்களில்..

நாடு முழுவதும் மொத்தம் 31 இடங்களில் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஆயினும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் முக்கனிகள் விளையும் பூமியான நெடுவாசலில் விவசாயம் பாதிக்கப்படும், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்று மக்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கையெழுத்தானது

ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க 22 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தம் இன்று அவசர அவசரமாக டெல்லியில் கையெழுத்தானது. அந்த 22 நிறுவனங்களில் 4 பொது துறை நிறுவனங்களும், ஒரு வெளிநாட்டு நிறுவனமும், 17 தனியார் நிறுவனங்களும் அடங்கும். நெடுவாசலில் ஜெம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்பு கையெழுத்தான நிலையில் அந்த நிறுவனங்கள் சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு என 30 வகையான அனுமதிகளை பெற வேண்டியது அவசியம்.

tamil.oneindia.com

TAGS: