உயிரை மாய்த்துக் கொள்வதை தவிர எமக்கு வேறு வழியில்லை!

tamilnadu_fishermen_001இந்திய எல்லையைக் கடந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் பிரவேசித்து மீன்பிடிக்கும் தமிழக மீன்பிடிப் படகுகளுக்கு ரூபா 10 கோடி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் வகையில் இலங்கை அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் கண்டனம் தெரிவித்து இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

இம்மீனவர்களின் வேலைநிறுத்தம் நேற்றும் தொடர்ந்தது.

எல்லையைக் கடந்து இலங்கைக் கடல் பரப்புக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 50 ஆயிரம் அபராதம், மீன்பிடிப் படகுகளுக்கு ரூ. 10 கோடி வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளதாக தமிழக மீனவர்களும் அங்குள்ள அரசியல்வாதிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சட்டத்தால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இராமேஸ்வரத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனைத்து மீனவர்கள் சங்கக் கூட்டத்தில், இலங்கையின் தீர்மானத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் சிறைப்பிடிக்கப்பட்ட 141 படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் நேற்று முன்தினம் (ஜூலை 9) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது எனவும், எதிர்வரும் 14-ம் திகதி இராமேஸ்வரம் தபால் அலுவலகம் முன்பாக மீனவர்கள் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவது என்றும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த முடிவின்படி நேற்று முன்தினம் முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அதனால் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், ஆயிரக்கணக்கான கடல்சார் தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர்.

போராட்டம் குறித்து மீனவர்கள் கூறுகையில்,

இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தால் மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

மத்திய அரசின் மெத்தனத்தால் மீன்பிடித் தொழில் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கச்சதீவு ஒப்பந்தப்படி பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும். அல்லது கச்சதீவை மீட்டு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

ரூபா 10 கோடி வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை இலங்கை திரும்பப் பெறாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசின் புதிய சட்டத்தை திரும்பப் பெற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மீனவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இதனை வலியுறுத்தி 14ம் திகதி இராமேஸ்வரம் தபால் நிலையம் முன்பு தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

-tamilwin.com

TAGS: