எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு

கோட்டைப்பட்டினம்,

கடலில் மீன் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 155 விசைப்படகுகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜான்பீட்டர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த இன்னாசி(வயது 40), ஜெமினி(48), கருப்பசாமி(50), பூமி(55), சுதாகர்(20) ஆகிய 5 பேரும் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், இன்னாசி உள்ளிட்ட 5 மீனவர்களும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி, அவர்களை சிறைபிடித்து, அவர்களுடைய விசைப்படகுடன் இலங்கைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களது விசைப்படகை பறிமுதல் செய்து இலங்கையில் உள்ள காரைநகர் துறைமுகத்தில் நிறுத்தி வைத்தனர். மேலும் மீனவர்கள் 5 பேரையும் கைது செய்து, இலங்கையில் உள்ள காங்கேசன் ராணுவ முகாமில் வைத்து, அவர்களிடம் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-dailythanthi.com

TAGS: