ஒரே சிரிஞ்ச் மூலம் பலருக்கு ஊசி போட்டதால் 46 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு போலி டாக்டர் கைது

புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் உன்னா நகரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அடுத்தடுத்து பலருக்கு எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டது. கடந்த 10 மாதங்களில் 46 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மாநில சுகாதாரத்துறை நடத்திய விசாரணையில், பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராஜேந்திர குமார் என்ற போலி டாக்டர், ஒரே சிரிஞ்ச் மூலம் பலருக்கு ஊசி போட்டதே இதற்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இதுபற்றி விசாரணை நடத்துவதற்காக, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பை சேர்ந்த 3 அதிகாரிகளை உன்னா நகருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. அக்குழுவினர், இன்னும் 2 நாட்களில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று தெரிகிறது.

இதற்கிடையே, ஒரே சிரிஞ்ச் மூலம் பலருக்கு ஊசி போடுவது குற்றச்செயல் என்று இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் கே.கே.அகர்வால் கூறியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் போலி டாக்டர் ராஜேந்திர குமாரை கைது செய்து உள்ளார். குறைந்த விலையில் மருத்துவம் என்பது காணமாகவே மக்கள் அவரிடம் சிகிச்சை சென்று உள்ளனர் என தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்பி சவுதாரி கூறினார். இதற்கிடையே அவரிடம் சிகிச்சை பெற்றவர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று நோயாளிகளுக்கு குறைந்த விலையில் மருத்துவம் பார்ப்பதாக போலி டாக்டர் ராஜேந்திர குமார் ஒரே சிரிஞ்ச் மூலம் பலருக்கு ஊசி போடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார் என தெரியவந்து உள்ளது. குறைந்த விலை என்பதாலே நாங்கள் மருத்துவம் பார்த்தோம் என மக்களும் கூறும் நிலை காணப்படுகிறது.

-dailythanthi.com

TAGS: