பள்ளிகள் நடத்த முடிகிறதே.. மாட்டுத்தொழுவமும் நடத்துங்கள்.. உ.பி பட்டாலியன் படைக்கு ஆணையிட்ட யோகி!

லக்னோ: 1940ல் இந்தியாவில் ஆயுதம் தாங்கிய பட்டாலியன் போலீஸ் படை உருவாக்கப்பட்டது. போலீஸுக்கு துணையாக அவசரக் காலங்களில் உதவ இந்தப் படை அமைக்கப்பட்டது.

ஆனால் இந்தப் படை உருவாக்கப்பட்ட போது அது இப்படி அவமானப்படுத்தப்படும் என்று நினைத்து இருக்க மாட்டார்கள். இந்தப் படை இருக்கும் குடியிருப்புகளில் பள்ளிகள் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் இந்தப் பள்ளிகள் போலவே மாட்டுத்தொழுவங்களும் நடத்தலாம் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி கோரியிருக்கிறார். அதோடு பட்டாலியன் படைக்கு புதிய ஆலோசனை ஒன்றையும் வழங்கி இருக்கிறார்.

முதல் கோரிக்கை

முதல் கோரிக்கை அரசு மூலம் சில நாட்களுக்கு முன் பட்டாலியன் படைக்கு அனுப்பப்பட்டது. அதில் ”பசுக்களைப் பாதுகாக்க நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். ஆகவே உங்கள் கட்டிடத்திற்குள் மாட்டுத்தொழுவம் அமைக்க இடம் கொடுக்க வேண்டும்” என்றது. எங்கெல்லாம் பட்டாலியன் குடியிருப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் அமைக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது.

மறுப்பு தெரிவிப்பு

பட்டாலியன் குடியிருப்பு இயக்குநராக இருக்கும் முன்னாள் ஐஏஎஸ் ராஜிவ் குப்தா இதற்கு அனுமதி அளிக்க வில்லை. அந்தப் பகுதிகளில் மாட்டுத்தொழுவம் நடத்துவது கஷ்டம் என்று கூறினர். அதேபோல் பட்டாலியன் படைக்கு நிறைய வேலை இருக்கிறது என்றும் கூறி இருந்தனர்.

மீண்டும்

இந்த நிலையில் அவருக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் ”பட்டாலியன் படையின் குடியிருப்பில் பள்ளிகள் இயங்கி வருகிறது. பள்ளிகளை இயக்க நேரம் இருக்கும் போது மாட்டுத்தொழுவமும் நடத்தலாம்” என்று கூறி இருந்தார்கள். ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

மூன்றாவது முறை

அதன்பின் மூன்றாவது முறையாகக் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் ”அப்படி என்றால் சிறையில் நிறைய இடம் இருக்கிறதே அங்குத் திறக்கலாமே” என்று கேட்டு இருக்கிறார்கள். இதற்கு தற்போது சிறை அதிகாரிகள் எல்லோரும் ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள்.

முதல் கட்டம்

தற்போது முதல்கட்டமாக 12 சிறைகளில் மாட்டுத்தொழுவம் அமைக்கப்பட இருக்கிறது. இதை அங்கு இருக்கும் கைதிகள் முறையாகப் பராமரிக்க வேண்டும். மாடுகளின் நன்மைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று அம்மாநில அரசு கூறியுள்ளது .

tamil.oneindia.com

TAGS: