தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு ஐ.நா.சபை கண்டனம்..

நியூயார்க்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் (மே) 22-ந் தேதி போராட்டம் நடந்தது. சுமார் 1 லட்சம் பேர் பேரணியாக சென்றனர். அப்போது நடந்த கலவரத்தை அடக்க நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

இதற்கு ஐ.நா.சபை மனித உரிமைகள் குழு நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஸ்டெர்லைட் இங்கிலாந்தில் இயங்கும் வேதாந்தா குழுமத்தின் வர்த்தக நிறுவனமாகும். மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தூத்துக்குடியில் போராட்டம் நடத்த பேரணியாக சென்றவர்கள் மீது அளவுக்கு அதிகமான போலீசார் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தி கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காலதாமதமின்றி சுதந்திரமான ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய அரசை (மத்திய அரசை) வலியுறுத்தி இருக்கிறோம்.

அனைத்து தொழில் நிறுவனங்களும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் சட்ட விதிமுறைகளை கடைபிடிக்க இந்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் அர்த்தமுள்ள உரிய பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இந்திய சுற்று சூழல் விதிகளுக்குட்பட்டு நடப்பதாக முழு உத்தரவாதம் அளித்த பிறகே ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-athirvu.in

TAGS: