வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

புதுடெல்லி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர் சிகிச்சையின் காரணமாக, ஓரளவு உடல்நிலை சீராக இயங்குவதாக தெரிவிக்கப்பட்டது. 94 வயதாகும் வாஜ்பாய் மூட்டுவலி பிரச்சினையால் மிகவும் அவதிப்பட்டு வந்ததாகவும், கடந்த 20 ஆண்டுகளில் 10 முறை மூட்டு வலிக்கான அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர் சிகிச்சை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். இந்நிலையில் இன்றிரவு வாஜ்பாயின் உடல் நிலை கவலைக்கிடமானது. தகவல் அறிந்ததும் பிரதமர் நரேந்திரமோடி, மருத்துவமனைக்கு விரைந்து சென்று, வாஜ்பாயின் உடல் நிலை குறித்து நலம் விசாரித்தார். சுமார் 50 நிமிடங்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்த பிரதமர் நரேந்திரமோடி, அங்கு, டாக்டர்களை சந்தித்து, வாஜ்பாய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களையும் கேட்டறிந்தார்.

இந்நிலையில் வாஜ்பாயின் உடல்நிலை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். துரதிருஷ்டவசமாக கடந்த 24 மணிநேரமாக அவரது உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. அவரது நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. மேலும், அவருக்கு உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தொடர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-dailythanthi.com

TAGS: