முன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி, இன்று வியாழக்கிழமை மாலை 5.05 மணிக்கு டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 93.

சிறுநீரக கோளாறு உள்ளிட்ட காரணங்களுக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூன் 11 அன்று அனுமதிக்கப்பட்ட அவர் தொடர் சிகிச்சையில் இருந்தார்.

கடந்த 36 மணிநேரமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து, உயிர் காப்பு சாதனங்களின் துணையுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஞாபக மறதி, நீரிழிவு உள்ளிட்ட உடல் உபாதைகள் இருந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாஜ்பேயின் மறைவுக்கு டுவிட்டர் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், உண்மையான இந்திய அரசியல்வாதியுமான வாஜ்பேயின் மறைவு, அவரது தலைமையத்துவம், தொலைநோக்குப் பார்வை, முதிர்ச்சி மற்றும் நாவன்மையை இழந்துவிட்ட உணர்வை அனைவருக்கும் வழங்கும் என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

மூன்று முறை இந்தியாவின் பிரதமராக இருந்த வாஜ்பேயி, 2009 முதல் பொது வாழ்வில் இருந்து விலகி இருந்தார். அதே ஆண்டு ஏற்பட்ட வாத நோயால் அவரது நடக்கும் திறனும், பேசும் திறனும் பறிபோனது.

காங்கிரஸ் கட்சியை சேராத இந்தியப் பிரதமர்களில் முதல் முறை தனது முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்தவர் வாஜ்பேயி.

1924 டிசம்பர் 25 அன்று மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்த வாஜ்பேயி, 1957இல் பாரதிய ஜன சங்கம் சார்பில் முதல் முறையாக நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அவசர நிலைக்குப் பிறகு ஜன சங்கம் ஜனதா கட்சியுடன் இணைக்கப்பட்டபின், 1977 முதல் 1979 வரை மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சியில் வாஜ்பேயி வெளியுறவு அமைச்சராக இருந்தார்.

1980-களில் ஜனதா கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியைத் தொடங்கிய முன்னணித் தலைவர்களில் ஒருவராக வாஜ்பேயி இருந்தார்.

1998ஆம் ஆண்டு பொக்ரானில் நடந்த அணுகுண்டு சோதனை, 1999இல் கார்கில் போரில் பாகிஸ்தானை இந்தியா வென்றது, பிரதமரின் தங்க நாற்கர சாலை திட்டம் மூலம் நாடு முழுவதையும் இணைக்கும் நெடுஞ்சாலைகள் அமைத்தது ஆகியன வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது நடந்தவற்றில் குறிப்பிடத்தகுந்தவை.

1996ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அழைப்பு விடுத்ததன் பேரில் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையிலான அரசு பதவியேற்றது. எனினும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 13 நாட்களில் வாஜ்பேயி பதவி விலகினார்.

1998இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் பிரதமானார் வாஜ்பேயி. எனினும் 13 மாதங்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆதரவை விலக்கிக்கொண்டதால், வாஜ்பேயி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

செப்டம்பர் 1999இல் நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று, வாஜ்பேயி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்தது. 2004 செப்டம்பர் மாதம் வரை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இருந்த நிலையில், தொடர்ச்சியாக சில மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வென்றதால், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, நான்கு மாதங்கள் முன்னதாகவே தேர்தல் நடத்தப்பட்டது. எனினும் அதில் பாஜக தோல்வி அடைந்தது.

அவர் கடைசியாக போட்டியிட்ட 2004 தேர்தலில், லக்னோ மக்களவைத் தேர்தலில் வாஜ்பேயி வெற்றி பெற்றிருந்தாலும், கூட்டணியின் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் மக்களவை எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தி கவிஞராகவும் பரவலாக அறியப்பட்ட வாஜ்பேயி இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்தார். அவருக்கு நமிதா எனும் வளர்ப்பு மகள் உள்ளார்.

2015ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

ஒரு சகாப்தத்தில் முடிவு: மோதி

“அடலின் மறைவுக்கு இந்தியாவே வருந்துகிறது. அவரது இறப்பு ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அவர் தேசத்துக்காகவே வாழ்ந்தார்…” என்று தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

வருத்தத்தைத் தெரிவிக்க வார்த்தை இல்லை: அத்வானி

“இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், 65 ஆண்டுகாலத்திற்கும் மேலாக என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயி மறைவுக்கு எனது வருத்தத்தை, இரங்கலைத் தெரிவிப்பதற்கு வார்த்தை இல்லாமல் தவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

“ஆர்எஸ்எஸ் இயக்க பிரசாரகர்களாக இருந்த காலம் தொடங்கி, பாரதிய ஜன சங்கத்தின் தொடக்கம், முதலில் ஜனதா கட்சியும், அதன் பிறகு 1980இல் பாரதிய ஜனதா கட்சியும் உருவாகவும் காரணமாக இருந்த அவசரநிலையின் இருண்ட நாள்கள் ஆகியவற்றில் வாஜ்பேயி உடன் இணைந்திருந்த நினைவுகளை போற்றுகிறேன்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

முதல் முறையாக மத்தியில் உறுதியான காங்கிரஸ் அல்லாத ஆட்சியை அமைத்த முன்னோடியாக வாஜ்பேயி அறியப்படுவார் என்றும், அவரிடம் துணைப் பிரதமராக ஆறாண்டுகள் பணிபுரிய தமக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும், அத்வானி கூறியுள்ளார். அந்தக் காலத்தில் அவர் தம்மை சாத்தியமான அனைத்து வழியிலும் ஊக்குவிக்கவும், வழிகாட்டவும் செய்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். -BBC_Tamil

TAGS: