கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் விவசாயி தற்கொலை பயிர்கள் கருகியதால் விஷம் குடித்தார்

வேளாங்கண்ணி, மேட்டூர் அணை இந்த ஆண்டு 4 முறை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் டெல்டா பாசனத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்தது.

இருப்பினும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியில் உள்ள வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படாததால் கடைமடை பகுதியில் உள்ள குளங்களுக்கு போதிய அளவு நீர் வந்து சேரவில்லை. இதனால் கடைமடை பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் தலையாமழை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 48). விவசாயியான இவர் குத்தகைக்கு நிலம் எடுத்து நெல் சாகுபடி செய்து வந்தார். இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான தலையாமழை பகுதிக்கு வந்து சேரவில்லை. இதனால் நெற்பயிர்கள் கருகின.

இந்தநிலையில் கருகிய நெற்பயிர்களை கண்டு மனமுடைந்த ராமமூர்த்தி கலக்கத்தில் செய்வதறியாது திகைத்து கடந்த சில நாட்களுக்கு முன் பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி இறந்தார்.

விஷம் குடித்து தற்கொலை செய்த ராமமூர்த்திக்கு, ரேவதி என்ற மனைவியும் கருணாகரன், கதிர்வேல் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராமல் பயிர்கள் கருகியதால் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் நாகை மாவட்ட விவசாயிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

-dailythanthi.com

TAGS: