ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு சிக்கல்?

சென்னை : ‘முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரை விடுதலை செய்யக்கூடாது’ என, ஸ்ரீபெரும்புதுாரில், ராஜிவுடன் பலியான, 14 பேரின் குடும்பத்தினர், கவர்னரிடம் மனு அளித்துள்ளனர்.

ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்ய, தமிழக அமைச்சரவை, கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. ‘அரசின் பரிந்துரையை ஏற்று, ஏழுபேரையும் விடுதலை செய்ய வேண்டும்’ என, அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். சட்ட நிபுணர்களுடன், கவர்னர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ‘ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது’ என, ராஜிவுடன் இறந்த, 14 பேரின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, கவர்னருக்கு ஒரு வாரத்திற்கு முன், ‘இ – மெயில்’ வாயிலாக, மனு அனுப்பி இருந்தனர்.

நேற்று, 14 பேருடைய குடும்ப உறுப்பினர்கள், கவர்னரை சந்தித்து, கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில், ‘ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்தால், அது, தவறான முன் உதாரணமாகி விடும். எனவே, அவர்களை விடுதலை செய்யக்கூடாது’ என, வலியுறுத்தி உள்ளனர்.

-dinamalar.com

TAGS: