நாளை டெல்லி ஸ்தம்பிக்கும்.. களத்தில் 5 லட்சம் விவசாயிகள்.. நிர்வாண போராட்டம் நடத்த திட்டம்!

டெல்லி: டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று மாலையில் இருந்து நாளை மாலை வரை மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளது.

நாம் நட்ட விதையொன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது என்று தமிழக விவசாயிகள் சந்தோசமாக மார்தட்டிக் கொள்ள முடியும். தமிழக விவசாயிகள் டெல்லியில் சென்று வருடம் முழுக்க நடத்திய போராட்டம் தற்போது இந்திய விவசாயிகளின் போராட்டமாக மாறியுள்ளது.

டெல்லியில் இன்று நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் வந்துள்ளனர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் டெல்லியை உலுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிண்டல் செய்தனர்

முதலில் சென்றவருடம் தமிழக விவசாயிகள்தான் டெல்லியில் இப்படி போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அப்போது இந்தியாவின் பிற மாநில மக்கள் தமிழர்களை கிண்டல் செய்தனர். விவசாயிக்கு ஒன்று என்றால் விவசாயிதான் வருவான் என்பதை போல சில நாட்களில் மகாராஷ்டிராவில் விவசாயிகள் போராட தொடங்கினர். இதோ இன்று இந்தியா முழுக்க உள்ள விவசாயிகள் ஒன்றாக போராட இருக்கிறார்கள்.

போராட்டம் நடக்க உள்ளது

இதற்காக தற்போது இந்தியா முழுக்க எல்லா மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லிக்கு வந்துள்ளனர். டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடக்க இருக்கிறது. இதற்காக இப்போதே ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் கூடி வருகிறார்கள். இன்று மாலை இந்த போராட்டம் தொடங்க உள்ளது.

என்ன கோரிக்கை

மொத்தம் 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடக்கிறது.

  • தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

*கஜா புயல் உள்ளிட்ட இயற்கை சேதங்களை விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.

  • நதிகளை இணைக்க வேண்டும்.

*விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மிக முக்கியமான கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.

எத்தனை பேர்

இதில் மொத்தம் 4-5 லட்சம் பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஆம், டெல்லியில், பல மாநிலத்தை சேர்ந்த 5 லட்சம் விவசாயிகள் போராட உள்ளனர். இப்போதே அங்கு 3 லட்சம் பேர் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. நாளை காலைக்குள் மீதமுள்ள விவசாயிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம்

இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து 350 பேர் அங்கு சென்று இருக்கிறார்கள். விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அவர்கள் டெல்லி சென்றுள்ளனர். திருச்சியில் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

டெல்லி ஸ்தம்பிக்கும்

இந்த போராட்டம் மூன்று கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு இந்த போராட்டம் நடக்க உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

1. முதற்கட்டமாக நாளை மாலை வரை அமைதியாக ராம்லீலா மைதானத்தில் போராடுவது.
2.இரண்டாவது கட்டமாக, கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் ரயில் மறியல் போராட்டம் செய்வது.
3. மூன்றாவது கட்டமாக டெல்லியில் சாலையில் இறங்கி மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

நிர்வாண போராட்டம் நடக்கிறது

நாளை மாலைக்குள் கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால், டெல்லியில் நாளை மாலை நிர்வாண போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். 5 லட்சம் பேர் நாளை மாலை டெல்லியில் நிர்வாண போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் இப்போதே டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

போலீஸ் பாதுகாப்பு

இதற்காக டெல்லியில் இப்போது 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். நாளை இன்னும் அதிக எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

-tamil.oneindia.com

TAGS: