மீண்டும் அரியாசனத்தில் அமருகிறார் மோடி.. 30ஆம் தேதி பிரமாண்ட பதவியேற்பு விழா!

டெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து நரேந்திர மோடி வரும் 30 ஆம் தேதி பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

தமிழகத்தின் வேலூர் தொகுதியை தவிர்த்து நாடு முழுவதும் 542 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக 350 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 3 லட்சத்து 85ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

வரலாற்றில் முதல்முறை

வரும் 30 ஆம் தேதி நரேந்திர மோடி பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்திக்கு பிறகு காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியை சேர்ந்த நபர் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்பது இதுவே இந்திய வரலாற்றில் முதல் முறையாகும்.

30ஆம் தேதி பதவியேற்பு

பிரதமர் மோடியுடனே அவரது அமைச்சரவையும் பதவியேற்கும் என கூறப்படுகிறது. பாஜக கூட்டணியின் பிரமாண்ட வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றன. வரும் 28ஆம் தேதி காசி செல்லும் பிரதமர் மோடி 30 ஆம் தேதி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமருகிறார்.

வாரி கொடுத்த வடமாநிலங்கள்

தென்னிந்தியாவில் சொல்லிக்கொள்ளும்படி பாஜககூட்டணி சோபிக்காவிட்டாலும் வட மாநிலங்களில் பாஜகவுக்கு வாரி வழங்கியுள்ளனர். குறிப்பாக மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், மேற்குவங்கம், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பெரும்பாலன இடங்களை சொந்தமாக்கியுள்ளது பாஜக.

காங்கிரஸ் வாஷ் அவுட்

மேலும் சில மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறவிடாமல் வாஷ்அவுட் செய்துள்ளது பாஜக. இந்த வெற்றி பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி என பாஜகவினர் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: