“கூடங்குளம் அணுமின் நிலையம் சரிவர செயல்படவில்லை” – உலக அணுசக்தி தொழில் அமைப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முழுஅளவில் மின் உற்பத்தி நடைபெறவில்லை என்று உலக அணுசக்தி தொழில் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

“உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அணு உலைகள், அணு ஆராய்ச்சி, அணு உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை கண்காணித்து வரும் அமைப்பு உலக அணுசக்தி தொழில் அமைப்பு (WNISR) 2019-ம் ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் கூடங்குளம் அணுமின் நிலையம் முறையாக செயல்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் அமைக்கப்பட்ட இரண்டு அணு உலைகளின் செயல்பாடும் மிகவும் மோசமாக உள்ளது.

முதல் அலகானது ஒட்டுமொத்த உற்பத்தித் திறனில் 54 சதவிகிதம் மட்டுமே மின் உற்பத்தி செய்கிறது. இரண்டாவது அலகு ஒட்டுமொத்த மின்னுற்பத்தி திறனில் 35.2 சதவிகிதம் மட்டுமே மின் உற்பத்தி செய்கிறது. அதுமட்டுமல்லாது, கூடங்குளத்தில் 2 அலகுகள் உள்ளபோதும் 2018ல் ஒரு நேரத்தில் ஒரு அலகில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்றுள்ளது.

எதிர்வரும் காலங்களில் கூடங்குளம் அணு உலையில், மின் உற்பத்தி மேலும் குறையக்கூடும் எனவும் உலக அணுசக்தி தொழில் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆலையில் மாற்று சக்தியை கொண்டு மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அமைப்பு அறிவுரை வழங்கியுள்ளது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-தினத்தந்தி

TAGS: