உலக தலைவர்களில் கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம்

கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் உலக தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.

புதுடெல்லி, கொரோனா என்ற கொலைகார வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளும் அனைத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் கொரோனாவை சிறப்பாக கையாளும் உலக தலைவர்கள் யார்? யார்? என்பது குறித்து ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற சர்வதேச நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி 68 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 36 புள்ளிகளுடன் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் 2-வது இடத்திலும், 35 புள்ளிகளுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் 3-வது இடத்திலும் உள்ளனர்.

அதே சமயம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மைனஸ் 3 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்தார். அதே போல் பிரான்ஸ் அதிபர் மெக்ரானுக்கு மைனஸ் 21 புள்ளிகளுடன் 9-வது இடமும், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு மைனஸ் 33 புள்ளிகளுடன் 10-வது இடமும் கிடைத்தது.

dailythanthi