ஒரே நாளில் 11502 பேருக்கு தொற்று- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 332424 ஆக உயர்வு

கொரோனா சிறப்பு வார்டு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.32 லட்சத்தை தாண்டி உள்ள நிலையில், 1.69 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 332424 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 11502 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 325 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9520 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 169798 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 7419 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 153106 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 107958 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 44661 பேருக்கும், டெல்லியில் 41182 பேருக்கும், குஜராத்தில் 23544 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

malaimalar