இந்தியாவில் ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு…?

இந்தியாவில் ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி; சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் சிங் இந்தியாவில் 14 கொரோனா தடுப்பூசிகள் மீது சோதனைகள் நடந்து வருவதாக தெரிவித்திருந்தார். அதன்படி 4 தடுப்பூசிகளின் பணிகள் அடுத்த 3 முதல் 5 மாதங்களில் மருத்துவ பரிசோதனைகளின் கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவாக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த மனித பரிசோதனையை இந்தியா ஜூலை மாதம் நடத்த உள்ளது.

இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் பாரத் பயோடெக்கின் தடுப்பூசிக்கு மருத்துவ மனித சோதனைகளின் கட்டம் 1 மற்றும் 2 ஐ நடத்த அனுமதித்துள்ளனர்.

இந்த கோவாக்சின் இந்தியாவின் தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்று பாரத் பயோடெக் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எலா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை இந்த தடுப்பூசி நிரூபிக்கிறது என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் புதிய வகையான வைரஸ் என்பதால், இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது கடும் சவாலான பணியாக உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதுவரை உலக அளவில் 17 தடுப்பு மருந்துகள் மனிதர்களிடையே பரிசோதிக்கப்பட்டுள்ளது.

உலகில் செயல்பட்டு வரும் 148 தடுப்பூசி சோதனைகளில் 5 இந்திய நிறுவனங்களிடமிருந்தோ அல்லது இந்திய நிறுவனங்களின் பங்களிப்பில் முயற்சியிலோ நடந்து வருகிறது. இதில் குஜராத்தின் ஜைடஸ் காடிலா நிறுவனமும் உள்ளது. அதே நிறுவனம் 2010 இல் நாட்டில் பன்றிக்காய்ச்சலுக்கான முதல் தடுப்பூசியை தயாரித்தது.

கூடுதலாக, பாரத் பயோடெக் மற்ற நோய்த்தடுப்பு மருந்துகள், இந்தியன் இம்யூனோலாஜிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா  மற்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் சேர்ந்து தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜைடஸ் கடிலா என்ற நிறுவனமும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பு மருந்துக்கும் மனிதர்களிடையே முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை  தொடங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முதல் உள்நாட்டு கொரோனா  தடுப்பூசியை வெளியிட இந்தியா திட்டமிடுகிறது ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து கோவாக்சின் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவ பரிசோதனைகள் நாடு முழுவதும் 12 நிறுவனங்களில் நடைபெறுகிறது. ஐ.சி.எம்.ஆர் இந்த நிறுவனங்களை தடுப்பூசியின் விரைவான மருத்துவ பரிசோதனைகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது, ஏனெனில் இது “அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் கண்காணிக்கப்படும்” “முன்னுரிமை திட்டங்களில்” ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த நிறுவனங்களுக்கு எழுதிய கடிதத்தில், அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முடிந்தபின், ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பொது சுகாதார பயன்பாட்டிற்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இறுதி முடிவு இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவ சோதனை தளங்களின் ஒத்துழைப்பைப் பொறுத்தது” என்று அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகள் விசாகப்பட்டினம், ரோஹ்தக், புதுடெல்லி, பாட்னா, பெல்காம் (கர்நாடகா), நாக்பூர், கோரக்பூர், கட்டங்கொளத்தூர் (தமிழ்நாடு), ஐதராபாத், ஆர்யா நகர், கான்பூர் (உத்தரபிரதேசம்) மற்றும் கோவாவில் உள்ளன.

dailythanthi