உறவினர்கள் பின்வாங்கியதால் கொரோனாவுக்கு பலியான 40 பேரின் உடல்களை அடக்கம் செய்த தன்னார்வலர்கள்

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலி

துமகூருவில், வைரஸ் பீதியால் உறவினர்கள் பின்வாங்கியதால், கொரோனாவுக்கு இறந்த 40 பேரின் உடல்களை தன்னார்வலர்கள் அடக்கம் செய்து உள்ளனர்.

துமகூரு : கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு, நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. கொரோனாவால் உயிரிழப்பவர்கள் உடல்களை ஆஸ்பத்திரியில் இருந்து எடுத்து சென்று, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுகாதாரத்துறையினர் அடக்கம் செய்து வருகின்றனர்.

ஆனால் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை சுகாதாரத்துறையினர் சரியாக கையாள்வது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு சான்றாக பல்லாரியில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை சுகாதாரத்துறையினர் தரதரவென இழுத்து சென்று அடக்கம் செய்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை தன்னார்வலர்கள் அடக்கம் செய்ய முன்வந்து உள்ளனர். அதாவது சுகாதாரத்துறையினருடன் இணைந்து கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை தன்னார்வலர்கள் அடக்கம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் துமகூரு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 40 பேரின் உடல்களை அடக்கம் செய்ய உறவினர்கள் முன்வராததால், 40 பேரின் உடல்களை தன்னார்வலர்கள் தூக்கிச்சென்று அடக்கம் செய்து உள்ளனர்.

அதாவது துமகூரு மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு இறந்து உள்ளனர். அவர்களில் 40 பேரின் உடல்களை பெற்று சென்று அடக்கம் செய்யும்படி மருத்துவமனை நிர்வாகம், உறவினர்களுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் வைரஸ் பீதியால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் பின்வாங்கினர். இதுபற்றி அறிந்த தன்னார்வலர்கள் 40 பேரின் உடல்களையும் பெற்று சென்று மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி அடக்கம் செய்து உள்ளனர்.

malaimalar