பெண் குழந்தை கல்வி உள்ளிட்ட விஷயங்களுக்காக பிரதமர் மோடி ரூ.103 கோடி நன்கொடை

புதுடில்லி: பெண் குழந்தை கல்வி உள்ளிட்ட விஷயங்களுக்காக, பிரதமர் மோடி, தன் சொந்த சேமிப்பு பணம் மற்றும் பரிசுகள் வாயிலாக கிடைத்த, 103 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த உயர்நிலை குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு அம்சங்கள் குறித்து, மோடி ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைந்துள்ளது. இருப்பினும், அலட்சியத்துடன் இருக்கக் கூடாது. சமூக இடைவெளியை பராமரிப்பது, முக கவசம் அணிவது போன்றவற்றில் சுணக்கம் ஏற்பட்டு விடக் கூடாது. வைரசுக்கு எதிரான தடுப்பூசி, அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் மற்றும் இயற்கை சீற்றங்களின்போது நிவாரணம் மேற்கொள்வது போல், அனைத்து துறைகளும் இணைந்து, செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பெண் குழந்தைகளுக்கு கல்வி, கங்கை நதியை துாய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில், பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், பிரதமர் தன் சொந்த சேமிப்பு பணம் மற்றும் தனக்கு வழங்கப்பட்ட பரிசுகளை ஏலத்தில் விற்று பெற்ற பணத்தையும், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, நன்கொடையாக வழங்கி உள்ளார். இதன்படி, 103 கோடி ரூபாய் அளவிற்கு, அவர் இதுவரை நன்கொடை வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

dinamalar