பிரான்சில் இருந்து 3 ரபேல் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியா வருகை

பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் ஜெட் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியா வந்தடைகின்றன.

புதுடெல்லி, நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2022 ஆம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நிறுவனம் முதல் தவணையாக ஐந்து விமானங்களை வழங்கியது. இந்த விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன. இதன் பிறகு அந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டதோடு, லடாக் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளின் பாதுகாப்பிற்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய விமானப்படைக்கு வலுசேர்க்கும் வகையில், பிரான்சில் இருந்து மேலும் மூன்று ரபேல் ஜெட் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியா வந்தடைகின்றன. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3 விமானங்களும், மார்ச் மாதம் 3 விமானங்களும், ஏப்ரலில் 6 விமானங்களும் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

dailythanthi