ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை

ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

ஐதராபாத், ஆந்திர மாநிலம் அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், கொரோனா விடுமுறைக்குப் பிறகு தர்மபுரம் பகுதியில் உள்ள வங்கியில் தற்காலிக பணியில் சேர்ந்து தினமும் வேலைக்குச் சென்று வந்தார். அவ்வாறு அவர் தினமும் சென்று வந்த போது ராஜேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய 2 நபர்கள் அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வம்பிழுத்துள்ளனர்.

இது குறித்து அந்த பெண் ஏற்கனவே தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண் வேலை முடிந்து வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் தர்மபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இது குறித்து காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஆந்திர மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திஷா சட்டத்தின்படி மொபைல் செயலி மூலம் புகார் அளித்தும் காவல்துறை அதை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று காலை காணாமல் போன பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதை தொடர்ந்து, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தர்மபுரம் பகுதியில் எரிந்த நிலையில் ஒரு இளம்பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். இது குறித்து நடைபெற்ற விசாரணையில் அந்த உடல் காணாமல் போன வங்கி பெண் ஊழியரின் உடல் என்பதும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ் என்ற இளைஞரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

dailythanthi