இந்திய-அமெரிக்க ராணுவங்கள் ராஜஸ்தானில் கூட்டு ராணுவ பயிற்சி

ராஜஸ்தானில் இந்திய-அமெரிக்க ராணுவங்கள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்று வருகிறது.

ஜெய்ப்பூர், ராணுவங்களுக்கு இடையிலான பரிமாற்றத் திட்டத்தின்படி, 16-வது முறையாக நடைபெறும் ‘யுத் அப்யாஸ்’ (யுத்த பயிற்சி) என்ற கூட்டு ராணுவ பயிற்சிக்காக அமெரிக்க ராணுவ வீரர்கள் கடந்த 5 ஆம் தேதி இந்தியா வந்தனர். அவர்களை இந்திய ராணுவத்தின் 170-வது படைப்பிரிவு பிரிகேடியர் முகேஷ் பன்வாலா வரவேற்றார்.

இதனை தொடர்ந்து இரு ராணுவங்களுக்கு இடையிலான கூட்டு ராணுவ பயிற்சி ராஜஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மகாஜன் களத்தில் நேற்று தொடங்கியது. வருகிற 21-ந் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில் இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இரு நாடுகளின் ஹெலிகாப்டர்கள், போர் தளவாடங்கள் என பெரும் ஆயுதங்களும் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பயிற்சியின் போது பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இரு நாட்டு ராணுவங்களின் பரந்த அனுபவங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். மேலும் மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் குறித்த அனுபவங்களும் இரு தரப்பும் பரிமாறிக்கொள்வார்கள். முன்னதாக பிரெஞ்சு ராணுவத்துடன் கடந்த மாதத்தில் 5 நாட்கள் இந்திய வீரர்கள் பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

dailythanthi