லக்னோவில் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்

விவசாயிகள் போராட்டம் காரணமாக லக்னோவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

லக்னோ, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 100-வது நாளை நெருங்கி உள்ளது.

இதேபோல் உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அவ்வப்போது போராட்டம் மற்றும் பேரணி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் காரணமாக லக்னோவில் 144 தடை (ஊரடங்கு) உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

லக்னோ போலீஸ் இணை கமிஷனர் நவின் அரோரா இதுகுறித்து கூறுகையில் ‘‘லக்னோவில் சட்டம்-ஒழுங்கு நிலைமை கேள்விக்குறியாகும் வகையில் விவசாயிகளின் போராட்டம் மோசமடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக இன்று முதல் அடுத்த மாதம் 5-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் எந்த விதமான ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் தடை செய்யப்படும்’’ என கூறினார்.

dailythanthi