இன்சூரன்ஸ் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது; எதிர்க்கட்சிகள் அமளி

புதுடில்லி: இன்சூரன்ஸ் துறையில், எப்.டி.ஐ., எனப்படும், அன்னிய நேரடி முதலீட்டை, 74 சதவீதமாக உயர்த்தும் மசோதாவுக்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்டன. அதனால், ராஜ்யசபா, நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டது; பின், குரல் ஓட்டெடுப்பு வாயிலாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை, 49 சதவீதத்தில் இருந்து, 74 சதவீதமாக உயர்த்தும் மசோதாவை, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

அது குறித்து, காங்.,கைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ”இந்த மசோதாவில் பல பிரச்னைகள் உள்ளன. அதனால், தேர்வு குழுவின் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும்,” என்றார்.அவருக்கு ஆதரவு தெரிவித்து, காங்., மற்றும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால், ராஜ்யசபா, நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக, மசோதாவை தாக்கல் செய்து,நிர்மலா சீதாராமன் கூறியதாவது:கடந்த, 2015ல், இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டு உச்ச வரம்பு, 24 சதவீதத்தில் இருந்து, 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன் மூலம், 26 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு கிடைத்து உள்ளது. தற்போது, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மூலதன நிதிச் சிக்கலில் உள்ளன.

ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனப் படும், இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையம் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை செய்த பிறகே, அன்னிய நேரடி முதலீடு உச்ச வரம்பு, 74 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.இதன்பின், குரல் ஓட்டெடுப்பு வாயிலாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின்போது, நிர்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது: வங்கி மோசடி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு, வெளிநாடு தப்பிய, தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹூல் சோக்சி ஆகியோரை நாடு கடத்தி வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. விரைவில் அவர்கள், இந்திய சட்ட விசாரணையை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar