கொரோனா தடுப்பூசி போட்டால் 56 நாட்கள் ரத்த தானம் செய்ய கூடாது – தேசிய ரத்தபரிமாற்ற கவுன்சில் தகவல்

கொரோனா தடுப்பூசி போட்டால் 56 நாட்கள் ரத்த தானம் செய்ய கூடாது நசுர தேசிய ரத்தபரிமாற்ற கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, நாடு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மீண்டும் வலுவாக போராட தொடங்கி இருக்கிறது. இதற்கு மத்தியில், கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டு அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் வழங்கியது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கி தடுப்பூசி போடும் பணி, நாட்டில் தீவிரம் அடைந்து வருகிறது.

சுகாதார பணியாளர்கள், முன் கள பணியாளர்களைத் தொடர்ந்து, தற்போது இணை நோய்களுடன் போராடுகிற 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. ஒவ்வொருவரும் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட 28 நாளில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும். இந்த நிலையில், தேசிய ரத்த மாற்று கவுன்சிலின் ஆட்சிமன்ற குழு கூட்டம் கடந்த மாதம் 17-ந் தேதி நடந்தது. அதில் கொரோனாவுக்கு எதிரான எந்தவொரு தடுப்பூசி டோஸ் எடுத்துக்கொண்டாலும், கடைசியாக போட்ட தடுப்பூசி டோசுக்கு பின்னர் 28 நாட்களுக்கு ரத்த தானம் செய்யக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய ரத்தமாற்ற கவுன்சில் ஒரு உத்தரவையும் போட்டுள்ளது. இந்த உத்தரவின்படி ரத்த தானம் செய்வோர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் 28 நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் என்பதாகும். இதன் அர்த்தம், ரத்த தானம் செய்வோர் முதல் தடுப்பூசியை போட்ட பின்னர் 56 நாட்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாது என்பதாகும். இந்த உத்தரவை தேசிய ரத்த மாற்று கவுன்சில் இயக்குனர் டாக்டர் சுனில் குப்தா கடந்த 5-ந் தேதி பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையே மத்திய சுகாதார அமைச்சகம், 28 நாள் இடைவெளியில் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் ஒருவர் பெற்றுக்கொள்ள வேண்டும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்ற பின்னர் 2 வாரங்கள் கழித்துத்தான் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிற நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும் என தெரிவித்துள்ளது.

dailythanthi