கர்நாடகா: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் பலி – விசாரணைக்கு உத்தரவு

கர்நாடகா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் பலியான விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பெங்களூரு, இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் விநியோகத்தின் மீது மிகக் கடுமையான அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே நேற்று முன்தினம் தலைநகர் டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு செயற்கையாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. அங்கு திடீரென ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 8 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனையில் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் உட்பட 24 பேர் கடந்த 24 மணி நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் பிற காரணங்களால் சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இவர்களின் மருத்துவ ஆய்வு அறிக்கைக்காக காத்திருப்பதாக மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மாவட்ட மருத்துவமனையில் 24 நோயாளிகளின் மரணம் குறித்து விசாரணைக்கு  சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் உத்தரவிட்டு உள்ளார்,. மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கல் பற்றாக்குறைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

dailythanthi