குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் தேதிகள் அறிவிப்பு

குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காந்திநகர், நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. பொருளாதாரம், போக்குவரத்து, அத்தியாவசிய தேவைகளின் அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா, இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்துள்ள மாவட்டங்களில் பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் என்று ஆலோசனை வழங்கினார். மேலும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் வசதி இல்லாத மாணவர்களின் நலனுக்காக பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அந்த மாநிலங்களில் தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. எனவே பல்வேறு கட்டுபாடுகளுடன் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி குஜராத் மாநிலத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளிகளை 50 சதவீத மாணவர்கள் வருகையோடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெற்றோரின் அனுமதி பெற்ற பிறகே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதே போல ராஜஸ்தான் மாநிலத்திலும் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

dailythanthi