ஒடிசாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு – இந்தியாவில் மொத்த பாதிப்பு 202 ஆக உயர்வு

ஒடிசாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி, தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை.

கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு, மேற்கு வங்காளம்  என பரவியது.

இந்த வைரஸ் தற்போது ஒடிசாவிலும் தடம் பதித்துள்ளது. ஒடிசாவுக்கு நைஜீரியா மற்றும் கத்தாரில் வந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களின் மாதிரிகளை மரபணு வரிசை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இருவருக்கும் ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 202 ஆக உயரந்துள்ளது.

அதிகபட்சமாக மராட்டியம் மற்றும் டெல்லியில் 54 பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானாவில் 20 பேரும் , கர்நாடகாவில்19 பேரும், ராஜஸ்தானில்  18 பேரும், கேரளாவில்  15 பேரும், குஜராத்தில் 14 பேருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து 74 பேர் குணம் அடைந்துள்ளனர். 13 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது.