இந்தியா பலமான நாடாக மாற, கிராமங்கள் வளர்ச்சி அவசியம்- மத்திய உள்துறை மந்திரி உறுதி

நாட்டின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்ற மகாத்மா காந்தியின் கருத்தை உறுதியாக நம்புகிறேன் வகுப்பறையில் கடைசி வரிசையில் உள்ள ஒருவர் கூட நாட்டிற்கு சிறந்ததை செய்ய முடியும்.

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ஊரக மேலாண்மை நிறுவனத்தின் 41வது வருடாந்தர பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டார். நான் அதை உறுதியாக நம்புகிறேன். பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் காந்திஜியின் கனவுகளை நனவாக்கப் பாடுபடவேண்டும்.

ஊரக வளர்ச்சியை உருவாக்காமல், கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருவரையும் வளம் மிக்கவர்களாக மாற்றாமல் இந்தியா ஒரு போதும் வளர்ச்சியடைந்த நாடாக மாறாது. மாணவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் நாட்டின் ஊரக வளர்ச்சிக்காக பாடுபடுவதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஊரக வளர்ச்சி என்பது வெறுமனே கொள்கை சார்ந்தது அல்ல, கிராமங்களுக்குப் பணியாற்ற உறுதியுடன் தம்மை அர்ப்பணிக்கும்போது மட்டுமே அது நடைபெறும். பல கோடி ரூபாய் சம்பாதித்த பிறகும் நீங்கள் திருப்தி அடைய முடியாது.

உங்கள் வாழ்க்கையில் ஒரு நபரை சுய தேவை பூர்த்தி அடைந்தவராக மாற்றினால் நீங்கள் சுய திருப்தி அடைய முடியும். திருப்தி என்பது மற்றவர்களுக்கு பணியாற்றுவதில் இருந்து வருகிறது. வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை நீங்கள் பெறும்போது அதிலிருந்து திருப்பித் தருவது உங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.

இந்தியா பலம் வாய்ந்த நாடாக மாற வேண்டுமென்றால் கிராமங்கள் வசதியாகவும் தற்சார்புடையதாகவும் இருக்கவேண்டும். இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற நோக்கத்திற்கு அனைத்து இந்திய கிராமங்களின் வளர்ச்சி அவசியம். மோடி பிரதமரான பிறகு ஊரக வளர்ச்சி பற்றிய புதிய தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார்.

வகுப்பறையில் கடைசி வரிசையில் உள்ள ஒருவர் கூட நாட்டிற்கு சிறந்ததை செய்ய முடியும். எனவே யாரும் தாழ்வு மனப்பான்மை கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எந்த ஒருவரும் பிறப்பால் பெரியவராதில்லை. சிறந்த சிந்தனையால் மட்டுமே பெரியவர் ஆகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Malaimalar