காலநிலை மாற்றத்தால் பாதிப்பு- சென்னையில் பரவி வரும் ‘மெட்ராஸ் ஐ’

‘மெட்ராஸ் ஐ’ என்று சொல்லக்கூடிய கண் நோய் சென்னையில் பரவுகிறது. இதனால் கண் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் கூட்டம் அதிகமாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் கண் நோய் தொற்று பரவல் ஏற்படும். தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவுகிறது. கண் உறுத்தல், சிகப்பு நிறமாக மாறுதல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேறுதல் போன்றவை கண் நோயின் அறிகுறியாகும்.

இந்த அறிகுறிகளுடன் குழந்தைகள், அதிகளவில் காணப்படுகின்றனர். பெரியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற அறிகுறி ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரை அணுக வேண்டும். மருந்து கடைகளில் சொட்டு மருந்தோ, டியூப் மருந்தோ வாங்கி பயன்படுத்தக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கால நிலை மாற்றத்தால் ஏற்படும் இது ஒரு வகை தொற்றாகும். அவற்றின் மூலம் கண்ணில் கிருமி தொற்றுகிறது. இது மற்றவர்களுக்கு பரவக்கூடியது.

அதனால் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக கைக்குட்டை வைத்து கண்ணில் இருந்து வடியும் நீரை துடைக்க வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கண்களை விரல்களால் அழுத்தக்கூடாது என்று கண் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் நோயாளிகள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

-mm