ஈமு கோழி திட்டத்தில் ரூ.5.65 கோடி மோசடி – உரிமையாளர், இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் ரூ.5.65 கோடி மோசடி செய்த நிறுவனத்தின் உரிமையாளர், இயக்குநருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) நேற்று தீர்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், குயின் ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனத்தை கரண்டிபாளையத்தைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் நடத்தி வந்தார். இவரது தம்பியான சக்திவேல் நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட்டு வந்தார். நிறுவனத்தின் ஒரு கிளை பொள்ளாச்சியில் செயல்பட்டு வந்தது.

இந்த நிறுவனத்தில், “ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 முதல் 10 ஈமு கோழிகளை அளிப்போம். அதற்கு தேவையான ஷெட் அமைத்து கொடுத்து, தீவனம் அளிப்போம். பராமரிப்பு தொகையாக 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் மற்றும் போனஸாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். 2 ஆண்டுகள் முடிவில் ஈமு கோழிகளை பெற்றுக்கொண்டு முதலீட்டு தொகையான ரூ.1.50 லட்சம் திருப்பி அளிக்கப்படும்” என விளம்பரப்படுத்தினர். இதேபோல, விஐபி திட்டம் உட்பட 3 வெவ்வேறு திட்டங்களையும் அறிவித்தனர்.

இவற்றை நம்பி கோவை, பொள்ளாச்சி, சூலூர், திருப்பூர், கேரளாவின் சில பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 295 பேர் ரூ.5.65 கோடி முதலீடு செய்தனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி பணத்தை திருப்பி அளிக்கவில்லை.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த வி.என்.ராமலிங்கம் என்பவர் கோவை பொருளாதார குற்றப் பிரிவில் கடந்த 2012-ம் ஆண்டு புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஏ.எஸ்.ரவி நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், மோசடியில் ஈடுபட்ட மயில்சாமி, சக்திவேல் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, மொத்தம் ரூ.5.68 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் சி.கண்ணன் ஆஜரானார்.

 

 

-th