தமிழ்த் திரைப்படங்களில் தமிழக தொழிலாளர்களையே பயன்படுத்த வேண்டும்: பெப்சி

தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பை தமிழகத்திலேயே நடத்திட வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு பெப்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொதுச்செயலாளர் பி.என்.சுவாமிநாதன், பொருளாளர் எஸ்.பி.செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த் திரைப்பட துறை வளர்ச்சிக்காக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தயாரிப்பாளர்கள் சங்கத்துடனும், அனைத்து திரைப்பட அமைப்புகளுடனும் கலந்தாலோசித்து சில விதிகளை பின்பற்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் முடிவு எடுத்துள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திட்ட ஒப்பந்ததை முழுமையாக பின்பற்ற வேண்டும். தமிழ் திரைப்படங்களில் தமிழகத்தில் உள்ள கலைஞர்களை, தொழிலாளர்களை, தொழில்நுட்பக் கலைஞர்களை, தயாரிப்பாளர்களை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பை தமிழகத்திலேயே நடத்திட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒழிய வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இயக்குநரே எழுத்தாளராக இருந்தால், கதை உரிமையில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் அவரே பொறுப்பேற்க வேண்டும். தயாரிப்பாளரையோ, திரைப்படத்தையோ அந்த பிரச்சினை பாதிக்கக் கூடாது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

-th