சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி ஆந்திராவில் பந்த்: பள்ளி, கல்லூரிகள் மூடல்

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் நடத்தும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிகப்பட்டுள்ளது.

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசக் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்றிரவு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து இன்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

பந்த் காரணமாக ஆந்திராவில் பரவலாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடைகள் அனைத்தும் மூடியிருக்கின்றன. பேருந்துகள் இயங்கவில்லை. திருப்பதி – திருமலை இடையே மட்டும் ஒன்றிரண்டு வாகனங்கள் இயங்குகின்றன. பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாததால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகின்றன.

இதனிடையே ஆங்காங்கே தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல், தர்ணாவில் ஈடுபட முயற்சிப்பதும் அவர்களைப் போலீஸார் கைது செய்வதும் நடைபெறுகிறது. தெலுங்கு தேசக் கட்சியின் எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க போலீஸார் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

சித்தூர் மாவட்ட தெலுங்கு தேசம் கட்சியின் துணை தலைவர் காஜூர் பாலாஜியை இன்று காலை போலீஸார் கைது செய்தனர்.

கைதி எண் 7691: ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவர்மம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு கைதி எண் 7691 ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு வீட்டு உணவு, மாத்திரை, மருந்துகள் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளுடன் கூடிய அறையே அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அவருக்கு ஜாமீன் கோரி அவர் தரப்பு வழக்கறிஞர்கள் இன்று மனு தாக்கல் செய்யவுள்ளனர். இது ஒருபுறம் இருக்க சிஐடி தரப்பில் அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது. சந்திரபாபு நாயுடுவை வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

-th