ஏலத்துக்கு வருகிறது காந்தியின் ரத்தக்கறை படிந்த மண்

மகாத்மா காந்தி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவரது உடலில் இருந்து வெளியேறிய ரத்தக்கறை படிந்தசிறிய அளவிலான மண்ணும், புற்கதிர்களும் இந்த மாதத்தின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் ஏலத்தில் விற்கப்படவுள்ளன.

இதுமட்டுமல்லாமல், இந்தியாவைச் சேர்ந்த இதர அரிதான பொருட்களும் பிரித்தானிய ஏல நிறுவனமான முல்லாக்ஸால் ஏலத்தில் விடப்படுகிறது.

காந்தி பயன்படுத்திய வட்டவடிவமான மூக்குக் கண்ணாடி மற்றும் மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்ட ஒரு கைராட்டையும் ஏலத்துக்கு வரவுள்ளன.

இந்த மாதம் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த ஏலத்தில், காந்தியின் ரத்தத்துடன் கூடிய மண் மற்றும் புற்கதிர்களுக்கான அடிப்படை மதிப்பீட்டுத் தொகை 16 ஆயிரம் முதல் 24 ஆயிரம் வரையிலான அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவரது ரத்தக்கறையுடன் கூடிய மண்ணும், புற்கதிர்களும் கண்ணாடி மூடியுடன் கூடிய ஒரு சிறிய மரப்பெட்டிக்குள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இதுதவிர காந்தி ஆங்கிலத்திலும் குஜராத்தி மொழியிலும் எழுதிய கடிதங்களும், அவர் 1946 ஆம் ஆண்டு லண்டனில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் முல்லாக்ஸ் நிறுவனத்தால் ஏலத்தில் விற்கப்படவுள்ளன.

இத்துடன், மகாராஜா ரஞ்சித் சிங்கின் உருவம் வரையப்பட்ட நுண்ணிய ஓவியம் ஒன்றும் ஏலத்துக்கு வருகிறது.

இதனிடையே, காந்தியின் ரத்தக்கறை படிந்த மண், புற் கதிர்களை ஏலத்தில் விடும் நடவடிக்கைக்கு காந்தியடிகளின் வழித்தோன்றல்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக, காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி இதுபற்றிக் கூறும்போது, ரத்தக்கறை படிந்த மண், புற்கதிர்களை ஏலம் விடுவது ஆரோக்கியமற்ற செயல் என்றும், அதே நேரத்தில், மூக்குக் கண்ணாடி, கடிதங்கள், ராட்டை போன்றவற்றை ஒரு தனியார் நிறுவனம் ஏலத்தில் விடுவதைத் தடுக்க முடியாது என்றும், அதே நேரத்தில் அந்தப் பொருட்களி்ன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

TAGS: