ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஒருவர் தீக்குளிப்பு

ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் சேலம் போஸ் அரங்கத்தில் ஒருவர் தீக்குளித்தார். பொதுமக்களும், சேலம் நகர காவல்துறையினரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

தீக்குளித்தவர் 26 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநரான விஜயராஜ் என தெரியவந்துள்ளது.

இன்று  (17.09.2012) அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் அவர் சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை உடலில்  ஊற்றிக்கொண்டு ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், அவர் இந்தியாவிற்கு வரக்கூடாது என்றும்  உரக்க கத்தியுள்ளார். அப்போது திடீர் என்று உடலில் தீ வைத்துக்கொண்டார். பொதுமக்களும், சேலம் நகர காவல்துறையினரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் ஈழ ஆதரவாளரான விஜயராஜ், பெரியார் பற்றாளர். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கொளத்தூர்  மணி தலைமையிலான திராவிடர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

மருத்துவர்கள் அவரை பேசக்கூடாது என்று கூறியும், “நான் எனது உணர்வுகளை மீடியாக்கள் மூலம் தமிழகத்துக்கு  தெரிவிக்கிறேன். என்னை பேசவிடுங்கள்” என்றார் விஜயராஜ்.

“இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள், டாங்கிகள், கனரக விமானங்கள் கொடுத்து தமிழர்களுக்கு தொடர் துரோகம்  இழைத்துள்ளது. இந்த மத்திய அரசும், சோனியா காந்தியும் இன்னும் திருந்தவில்லை. இனியாவது இவர்கள் திருந்த  வேண்டும். என்னுடைய உயிர் ஆயுதத்தை பார்த்து தமிழர்கள் ராஜபக்சேவை செருப்பால் அடிக்க வேண்டும்.  அதற்காகத்தான் இதை நான் செய்தேன். ராஜபக்சேவை இந்தியாவிற்குள் விடக்கூடாது. இத்தனை வீரமரணத்திற்கும் பிறகும் ராஜபச்சேவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுக்கிறது. இதை பார்த்தாவது தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப்  பெற்று ராஜபக்சேவை எதிர்க்க வேண்டும்” என்றார் பலத்த தீக்காயங்களுடன் அவதிப்பட்டுக்கொண்டே…

“80 சதவீதத்திற்கு மேலாக தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சையில் இருக்கிறார். காப்பாற்ற முயற்சி செய்கிறோம்” என மருவத்துவர்கள் கூறினர்.

அவரது முச்சக்கர வண்டியில் வைக்கப்பட்டுள்ள டைரியில் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைய தகவல்களை எழுதியிருப்பதாக கூறியதை தொடர்ந்து அவரின் முச்சக்கர வண்டியிலிருந்து “டைரி”யை காவல்துறையினர் விசாரணைக்காக கைப்பற்றியுள்ளார்கள்.

தமிழ் உணர்வாளர் தீக்குளித்த தகவல் கிடைத்ததும், சேலம் நகரம் மட்டுமில்லாது மாவட்டத்தின் பல பகுதிகளிளுமிருந்து தமிழின உணர்வாளர்கள் சேலம் மருத்துவமனைக்கு வந்தனர். இதை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.

TAGS: