ஸ்டாலின் திமுக தலைவர் ஆவதையே விரும்புகிறேன்: கருணாநிதி

karunanidhi_stalin_dmkதிமுக தலைவர் மு கருணாநிதி தனக்குப் பின் கட்சியின் அடுத்த தலைவராக தனது இரண்டாவது மகன் ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டுமென்ற தனது விருப்பத்தினை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்புகூட ஒரு கட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், தான் செய்துவரும் சமுதாயப் பணியினைத் தனக்குப் பிறகு ஸ்டாலின் ஆற்றுவார், அதற்கு எல்லோரும் ஒத்துழைக்கவேண்டும் என அவர் கோரியிருந்தார்.

தனது வாரிசு ஸ்டாலின்தான் என மீண்டும் கருணாநிதி குறிப்பிடுகிறார் என்று ஊடகங்கள் அப்போது செய்திவெளியிட்டன.

கருணாநிதியின் மூத்தமகன் அழகிரியோ, தனது தந்தை வேறொரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்ததை மேற்கோள்காட்டி “திமுக ஒன்றும் சங்கரமடமல்ல வாரிசுகள் நியமிக்கப்பட” எனக் கூறினார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, “தலைவர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் உரியமுறைப்படியே தேர்ந்தெடுக்கப்படவேண்டும், அவ்வகையில் அடுத்த தலைவரை முன்மொழியும் வாய்ப்பு தனக்குக் கிடைக்குமானால் ஸ்டாலினைத் தான் முன் மொழிவேன்” என்றார்.

அவ்வாறு ஸ்டாலின் அடுத்த தலைவராகவேண்டுமென ஏற்கெனவே கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் ஆலோசனை கூறியிருப்பதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.

ஆனால் தற்போது நடைபெறவிருக்கிற உட்கட்சித் தேர்தல்களிலேயே ஸ்டாலின் தலைவராக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார்.

“கட்சி முடிவுசெய்யும்” என்று மட்டும் கூறினார்.

2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களுக்கு முன்பு உட்கட்சித் தேர்தல்கள் நடைபெறுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என கருணாநிதி கூறினார்.

வேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில், “அழகிரி விருப்பப்பட்டால், அவரும் தலைவர் பதவிக்கு போட்டியிடலாமே” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த அளவில் கருணாநிதி தனது அரசியல் வாரிசு ஸ்டாலின் தான் என்பதை உறுதிசெய்துவிட்டார் எனலாம்.

அழகிரி ஏற்றுக்கொள்ள மறுக்கலாம், ஆனால் பொதுக்குழு உறுப்பினர்களில் மிகப் பெரும்பாலானோர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஸ்டாலின் தலைவராவதில் தனக்கொன்றும் பிரச்சினையில்லை என கருணாநிதியின் மகள் கனிமொழியும் கூறியிருக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

TAGS: