இராமேஸ்வரம் மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் விரட்டியடிப்பு

indian_fishersஇராமேஸ்வரம் மீனவர்களின் மீன் பிடி சாதனங்களை சேதப்படுத்திவிட்டு மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

16 நாட்கள் வேலை நிறுத்தத்தப் போராட்டத்திற்கு பின்னர் திங்கட்கிழமையன்றுதான் 500-க்கும் மேற்பட்ட படகுகளில் இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். கச்சத்தீவு பகுதியில் நேற்றிரவு 9.30 மணி அளவில் மீன்பிடித்து கொண்டிருந்த அவர்களை, 2 பெரிய படகுகள் மற்றும் 4 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை, ஆதாம் பாலம் பகுதியை ஒட்டிய, இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த, மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர், தாக்குதல் நடத்தியதோடு படகுகளை சேதப்படுத்தியுள்ளனர். அத்துடன் மீன்பிடி வலைகளையும் அறுத்து எறிந்ததுடன், மீன்களையும், கடலில் அள்ளி வீசியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இதனால் பெரும் இழந்து ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அதிகாரிகளுக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் கரைக்கு திரும்பி வந்தால்தான், மீனவர்களின் காயங்கள் மற்றும் சேத விவரங்கள் முழுமையாக தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TAGS: