சோனியாகாந்தி பாதுகாப்புக்கு பெண் கமாண்டோ படை

indian_commandoவி.வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பை சிறப்புப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களில் தற்போது 35 பெண் கமாண்டோக்களே உள்ளனர். இவர்கள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடை பெற உள்ளதால் வி.வி.ஐ. பி.க்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சோனியா மற்றும் பிரியங்கா ஆகிய இருவருக்கும் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் சோனியா, பிரியங்காவுக்கு பெண் கமாண்டோக்களை பாதுகாப்பாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கான பெண்கள் பாதுகாப்பு படையை உருவாக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் இருந்து இதற்கான பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்போது மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் 5 ஆயிரம் பெண்கள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் நாடெங்கும் உள்ள விமான நிலையங்களிலும் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவர்களில் விருப்பம் உள்ளவர்கள் தேசிய பாதுகாப்புப் படைக்கு வரலாம் என்று அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

35 வயதுக்குட்பட்ட பெண்களே இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். பிறகு அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். அதன் பிறகு அவர்கள் சோனியா, பிரியங்காவின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்பார்கள்.

TAGS: