தொலைக்காட்சி நிகழ்ச்சியால் அவமானம் : வாலிபர் கொலை

murderதிருச்சி உறையூரை சேர்ந்த முருகானந்தம். சில நாட்களுக்கு முன்பு கடத்தி வரப்பட்டு கொடைக்கானல் வனப்பகுதியில் கழுத்தை அறுத்து, எரித்து கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சரணடைந்த சரவணன் 28, மணிவண்ணன் 21, கள்ளக்காதலி சுதா 36, முருகானந்தத்தின் தாய் பாப்பாத்தி 60, தந்தை கந்தசாமி 80 ஆகியோரை திருச்சி போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தனர். உடல் பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது.

2012 டிச.31ல் தனியார் “டிவி’ நிகழ்ச்சி ஒன்றில், கணவர் சரவணனுடன், சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும், முருகானந்தத்துடன் சேர்ந்து வாழ போவதாகவும் சுதா கூறியுள்ளார். முருகானந்தமும் ஒத்துக்கொண்டுள்ளார்.

கணவனை விட்டு பிரிந்த சுதா, தனது 2 மகன்களுடன் கருமண்டபத்தில் தனியாக வீடு எடுத்து, வசித்துவருகிறார். கடந்த மே 1ம் தேதி, காலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கதவை தட்டியுள்ளார். சுதா கதவை திறந்தவுடன், அவரை தள்ளி தாக்க முயன்றவுடன் கதவை சாத்தியுள்ளார். வீட்டிற்குள் படுத்திருந்த முருகானந்தம் வெளியே வந்து, சத்தம்போட்டுள்ளார். வாசலில் இருந்த 5 பேர், முருகானந்தத்தை தாக்கி, காரில் இழுத்துப்போட்டு அடித்துள்ளனர்.

தலையில் தாக்கியுள்ளனர். மயக்கமடைந்த முருகானந்தத்தை காரில் கடத்தியுள்ளனர். பெரியகுளம் கொண்டு வந்த இவர்கள், கொடைக்கானல் வனப்பகுதியில், கழுத்தை அறுத்து எரித்துள்ளனர். உடலை வீசி விட்டு சென்றுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்ததாக திருச்சி போலீசார் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியை பார்த்து, திருச்சியில் உள்ள சிலர், தங்கள் குடும்பத்தை கேவலமாக பேசியதாகவும், அதனால் ஆத்திரமடைந்து முருகானந்தத்தை கொலை செய்ததாக, சுதாவின் தம்பிகள் சரவணனும், மணிவண்ணனும் வாக்குமூலம் தந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் சுதா கூறுகையில்,தனது தம்பிகள் சரவணன், மணிவண்ணன், வெங்கடேஷ் மற்றும் இருவர் இக்கொலையை செய்துள்ளனர். முருகானந்தத்தை கொலை செய்ய தூண்டியது கணவர்தான். எனவே அவரை கைது செய்ய வேண்டும்,” என்றார். விசாரணயை திருச்சி போலீசார் மேற்கொள்வர் என கொடைக்கானல் போலீசார் தெரிவித்தனர்.

TAGS: