உயிர்த் தோழியை மணக்க விரும்பிய மாணவி: மறுத்ததால் கத்திகுத்து

knife attackபிவானி: ஹரியானா மாநிலத்தில் 17 வயது மாணவி ஒருவர் தன்னுடைய தோழியை மணக்க ஆசைப்பட்டுள்ளார். தோழி மறுத்ததால் அவரை கத்தியால் குத்திய மாணவி கைது செய்யப்பட்டார்.

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டம், சன்வார் கிராமத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு படிக்கும் 17 வயது சரிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன்னுடன் படிக்கும் கமலாவுடன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 3 ஆண்டுகளாக நெருங்கிப் பழகி வந்துள்ளார். அவர்கள் இருவரும் பிளஸ் 1 முடித்துள்ளனர். இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்புக்கு செல்லவிருக்கின்றனர்.

இந்நிலையில் கமலாவிடம் சரிகா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். இதைக் கேட்ட கமலா அதிர்ச்சி அடைந்து இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் சரிகாவை அழைத்து கண்டித்துள்ளனர்.

அப்படியும் சரிகா கமலாவின் வீட்டுக்கே சென்று தன்னை மணக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் கமலா மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சரிகா கத்தியை எடுத்து தனது தோழியை குத்தினார்.

உடனே கமலாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கமலாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் சரிகாவை கைது செய்தனர். சரிகா மாணவி என்பதால் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துவிட்டனர்.

TAGS: