எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறி அட்டூழியம்

india10713aலே: எல்லையில் மீண்டும், சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கேமராக்களை உடைத்தும், பதுங்கு குழிகளை சேதப்படுத்தியும் அட்டூழியம் செய்துள்ளது.

அண்டை நாடான சீனாவுக்கும், இந்தியாவுக்கும், நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின், லே பகுதியில், நடைமுறை எல்லை கட்டுப்பாட்டுக் கோடு உள்ளது. அந்த கோட்டை ஒட்டி, இந்திய பகுதியில் அமைந்துள்ள இடங்களை, தங்கள் பகுதி என, கூறி வரும் சீன ராணுவம், அவ்வப்போது, அந்த பகுதிகளில் அத்துமீறலில் ஈடுபடுவது வழக்கம்.

கடந்த, ஏப்ரல் மாதம், 20ம் தேதி, லே பகுதியின், டி.பி.ஓ., என்ற இடத்திற்குள் நுழைந்த, சீன மக்கள் விடுதலை ராணுவ வீரர்கள், 21 நாட்கள் அங்கேயே முகாமிட்டு, எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தினர். இந்நிலையில், லே பகுதியின் மற்றொரு இடமான, சூமார் என்ற இந்திய கிராமம் அருகே, சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, அட்டூழியம் புரிந்துள்ள தகவல் வெளியாகிஉள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே, எல்லைப் பிரச்னை இருப்பதால், சூமார் பகுதியில், இந்திய ராணுவம், கேமராக்களை பொருத்தி, சீன ராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது. அது போல், அங்கு பல பதுங்கு குழிகளையும் அமைந்துள்ளது.

கடந்த, 17ம் தேதி அங்கு வந்த சீன ராணுவத்தினர், கேமரா ஒயர் இணைப்புகளை துண்டித்து, பதுங்கு குழிகளை தகர்த்து, அட்டூழியம் புரிந்துள்ளனர். எனினும், கடந்த முறை போல், இந்த முறை, முகாமிடவோ அல்லது போர் பயிற்சியில் ஈடுபடவோ இல்லை.

கடந்த ஆண்டும் இது போல், அந்த பகுதிக்குள் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய சீன ராணுவத்தினர், இந்திய ராணுவம் மற்றும் இந்தோ – திபெத் எல்லை போலீஸ் படையினர் அமைத்திருந்த கூடாரங்களை தகர்த்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: