விடிந்தும் விடியாத நிலைதான்: என்று தனியும் சுதந்திர தாகம்?

~இராகவன் கருப்பையா

நாடு சுதந்திரமடைந்து 68 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் நமக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.

அண்மைய காலமாக நம் சமூகத்திற்கு எதிராக, குறிப்பாக இந்து ஆலயங்கள் தொடர்பாக அப்பட்டமாக, அதிகாரப்பூர்வமாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அட்டூழியங்கள் நம் மனங்களை அதிக அளவில் வருத்துகிறது.

‘பழைய குருடி கதவைத் திறடி’ எனும் உவமைக்கு ஏற்ப, “என்றுதான் தனியும் இந்த சுதந்திர தாகம்,” எனும் கேள்விக்கு விடை தேடும் நிலைக்கு நாம் மீண்டும் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்நாட்டில் காலங்காலமாக நம் சமூகம் ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, உதாசினப்படுத்தப்பட்ட அவல நிலையில் பரிதவிக்கிறது என்றுதான் நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

தற்பொழுது அதையும் தாண்டி ஆங்காங்கே எண்ணற்ற இந்து ஆலயங்கள் உடைக்கப்படுவது நமக்கு மிகவும் வேதனையளிக்கிறது.

தெரிந்தோ தெரியாமலோ இச்சூழலுக்கு பிரதமர் அன்வார் வித்திட்டுள்ளார் என்பதை உணரும் போது இதயம் வலிக்கத்தான் செய்கிறது.

கேட்பாரற்ற, வலுவிழந்த நிலையில் இங்கு நாம் வாழ்ந்து கொண்டிருப்பதை இச்சூழல் மிகவும் அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

உருப்படியான ஒரு தலைமைத்துவம் இல்லாமல், நமது உரிமைகளை முறையாகப் பெற்றுத் தருவதற்கு பொறுப்பானதொரு அரசியல் கட்சி இல்லாமல், ஆண்டாண்டு காலமாக நாம் அரசியல் அனாதைகளாகத்தான் நாட்களை நகர்த்துகிறோம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோலாலம்பூர் வந்திருந்த போது அவர் முன்னிலையில் நம் சமூகத்தை வெகுவாகப் பாராட்டி அன்வார் மிகச் சிறந்ததொரு பேருரையாற்றினார்.

அதாவது இந்நாட்டின் வளப்பத்திற்கு நமது முன்னோர்கள் எவ்வாறெல்லாம் உழைத்துள்ளனர் என்று அவர் பாராட்டிப் பேசிய போது நமக்கெல்லாம் மிகவும் பெருமையாகவும் உச்சந்தலையில் ‘ஐஸ்’ வைத்ததைப் போல குளிர்ச்சியாகவும் இருந்தது.

தங்களுடைய முதலாளிகளின் அனுமதியோடு கோயில்களை நிர்மாணித்து, அவ்வாலயங்களை ஒரு பாதுகாப்பு அரணாகக் கொண்டுதான் நம் முன்னோர்கள் நாட்டின் வளப்பத்திற்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்து உழைத்தனர் எனும் விவகாரம் அன்வாருக்குத் தெரியாதா என்ன!

ஆனால் அதற்கு அடுத்த நாளே, “சட்டவிரோத வழிபாட்டுத்தலங்களை தகர்த்தெரியுங்கள்,” என ஊராட்சி மன்றங்களுக்கு அவர் கட்டளையிடுவார் என்று நாம் சற்றும் எதிர்பார்க்கவில்லைதான்.

நம் இதயங்களில் ஈட்டியைப் பாய்ச்சியதைப் போலான மூர்க்கத்தனமான அந்த உத்தரவு ‘மடை திறந்த வெள்ளத்திற்கு’ வழிவகுத்துவிட்டது.

அதற்கு அடுத்த நாளே சிலாங்கூர் ரவாங்கில் ஒரு இந்து ஆலயம் உடைக்கப்பட்து. அன்வாரின் உத்தரவின் பேரில்தான் இவ்வாறு செய்தோம் என சம்பந்தப்பட்ட ஒருவர் மிகத் திமிராக சூளுரைத்தார்.

“இந்த கோயிலும் கூட ‘ஹராம்'(சட்ட விரோதம்)தான்,” என பத்துமலை திருத்தலத்தின் முன் வாசலுக்கு வெளியே நின்று கொண்டு ஒரு மலாய் பெண்மணி காணொளி பதிவு செய்திருந்தார்.

இந்த இடம் ‘ராஜா கோம்பாக்’ எனும் ஒரு மலாய் அரசருக்குச் சொந்தமானது என்று அறிவிலித்தனமாக அவர் உளறிய காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவியது.

முறையான அனுமதியின்றி வழிபாட்டுத்தலங்களை அமைக்கக் கூடாது எனும் அன்வாரின் கருத்து நியாயமான ஒன்றுதான். அவ்வாறான நிர்மாணிப்புகளை ‘சட்ட விரோதம்’ என்று கூறலாம், அக்கட்டுமானங்களை அப்போதே தடுத்து நிறுத்துவதிலும் தவறில்லை.

மற்றொருவருக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு துரும்பையும் நடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் பத்திரங்கள் இல்லாத காரணத்தினால், நூற்றாண்டு காலங்களாக நம் சமூகத்தினர் வழிபட்டுவரும் கோயில்களை அவர் தகர்க்கச் சொல்லியிருக்கக் கூடாது. மாறாக, சுமூகமாகத் தீர்வுகாண வேண்டும் என அவர் வலியுறுத்தியிருக்க வேண்டும்.

தனது உத்தரவை அன்வார் மீட்டுக் கொள்ள வேண்டும் என முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் அம்பிகா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேந்திரன் போன்ற சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்ட போதிலும் பிரதமர் அதற்கு கடுகளவும் மசியவில்லை.

ஆக, அதிகாரப்பூர்வமாக நாம் இப்படி வஞ்சிக்கப்படுவதால் இந்நாட்டில் நமக்கான பொழுது இன்னும் விடியவில்லை என்றுதானே பொருள்படும்! சுதந்திர தாகம் இன்னமும் தனியவில்லை என்றுதானே அர்த்தம்!