பிரதமரை குறை கூற வேண்டாம்: சோனியா

soniyaபிரதமர் மன்மோகன் சிங்கை குறை கூற வேண்டாம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டார்.

கர்நாடகத்தில் அண்மையில் நடைபெற்ற இரு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையொட்டி, மண்டியா விஸ்வேஷ்வரய்யா மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

கர்நாடகம் தேசிய அளவில் பல்வேறு இலக்கியவாதிகளையும் சிறந்த அரசியல்வாதிகளையும் உருவாக்கித் தந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் மண்டியாவில் ரம்யாவையும், பெங்களூர் ஊரகத்தில் சுரேஷையும் வெற்றி பெறச் செய்துள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் முறைகேடு இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.

கர்நாடகத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என 30 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள், சிறுபான்மையினரின் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நீர்ப்பாசனத் திட்டத்துக்கு ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் “காங்கிரஸ், சொல்வதைச் செய்யும்’ என்பதை நிரூபித்துள்ளோம்.

எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடக முதல்வராக இருந்தபோது பெங்களூத்க் தகவல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப நகரமாக வளர்ந்தது.

மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

ஆனால், மத்திய அரசை குறைகூற வேண்டும் என்ற குறிக்கோளுடன், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே பல்வேறு குறைகளைக் கூறி வருகின்றன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் உணவுப் பாதுகாப்புச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் , மகளிர் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வேறு எந்த ஆட்சியிலும் இதுபோன்ற சாதனைகளை யாரும் செய்ததில்லை.

காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் சிந்தனைகளைச் செயல்படுத்தும் பாரம்பரியம் கொண்டது.

ஆனால், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே பிரதமர் மன்மோகன் சிங்கை குறை கூறி வருகின்றன.

பல்வேறு சாதனைகளைச் செய்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் கட்சி துணையாக நிற்கும் என்றார் சோனியா காந்தி.

TAGS: