‘டமில்நாடை’ ‘தமிழ்நாடாக’ மாற்றும் அதிகாரம் இல்லை!

high_court_001‘டமில்’ என்பதை ‘தமிழ்’ என்று மாற்றுவதற்கு தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் கீழ்மருவத்தூரை சேர்ந்தவர் கண்ணன் கோவிந்தராஜூ. இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,
தமிழ்மொழி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த செம்மொழியாகும். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மட்டுமே ‘ழ’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

இந்த வார்த்தையை ஆங்கிலேயர்களால் உச்சரிக்க முடியாததால், அவர்கள் ‘தமிழ்’ என்ற சொல்லை ‘டமில்’ என்று உச்சரித்தனர்.

இந்நிலையில், மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இதையடுத்து, 1969ம் ஆண்டு ஜனவரி 14ம் திகதி ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால், ஆங்கிலத்தில் இதை ‘டமில் நாடு’ என்று எழுதப்பட்டு வருகிறது.

மேலும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசிடம் பெற்ற விவரத்தில், ‘டமில்நாடு’ என்று ஆங்கிலத்தில் எழுதுவதை ‘தமிழ்நாடு’ என்று எழுதும் விதமாக ஆங்கில வார்த்தைகளை மாற்றவேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறை 2009ம் ஆண்டு தமிழக அரசுக்கு பரிந்துரை செயதுள்ளது.

இதன் பின்னர். 2013ம் ஆண்டு இதே கோரிக்கையுடன் மற்றொரு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எனவே இதுகுறித்து தகுந்த உத்தரவினை தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி கே.ரவிசந்திரபாபு ஆகியோர் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநிலத்தின் பெயரை மாற்றும் அதிகாரம், பாராளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. அந்த அதிகாரம் மாநில சட்டசபைக்கு இல்லை. எனவே இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.

TAGS: