சிறந்த நிர்வாகமும்; வளர்ச்சியுமே குறிக்கோள் ‘- பா.ஜ., தேர்தல் அறிக்கை வெளியீடு

bjp-flag-_newபுதுடில்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ஜ., கட்சியின் லோக்சபா தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியிடப்பட்டது. பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி இன்று கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டு இதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து விளக்கினார். இந்த தேர்தல் வாக்குறுதியில் பிரதமர் வேட்பாளரான மோடியின் எண்ணம் பிரதிபலித்துள்ளது. அவர் பிரசார மேடைகளில் முழங்கி வந்த 5 – டி ( டேலன்ட், டூரிசம், டிரேட், டிரடிஷன், டெக்னாலஜி ) ஆகியவை மேம்படுத்தப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

 

தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங், மூத்த தலைவர் அத்வானி, லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

narendra_modiதேர்தல் அறிக்கை குறித்து, அதன் அறிமுக உரையில் முரளிமனோகர் ஜோஷி பேசியதாவது: இந்த ‘தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டதன் மூலம், நாட்டிற்கு ஒரு புதிய துவக்கம் கிடைத்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் மேலான ஆலோசனைகள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள் என, பல தரப்பினர் ஆலோசனைகள் வழங்கினர். விலைவாசியை குறைக்க சிறப்பு திட்டங்கள் கூறப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு, கறுப்பு பணம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேர்தல் அறிக்கை அமைக்கப்பட்டுள்ளது. நீதித்துறை மற்றும் காவல்துறை சீர்திருத்தத்திற்கான அம்சங்கள் உள்ளன. சிறுபான்மையினர் பெண் குழந்தைகள் சிறந்த கல்வி பெறவும், வேலை வாய்ப்பு பெறவும் திட்டங்கள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு ஜோஷி பேசினார்.

 

தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் :

 

* அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை

 

* வேலை வாய்ப்பு- கட்டமைப்புக்கு முக்கியத்துவம்

 

*பணவீக்கம்- விலைவாசி கட்டுப்படுத்த முதல் பணி

 

* பெண்களுக்கு அதிகாரம் – நகர்ப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை

 

* இ முறையில் கல்வித்திட்டம்

 

*நவீன தொழில் நுட்பத்துடன் அனைத்து துறைகளும் மேம்படுத்தப்படும்

 

* திறம் வளர்க்க சிறப்பான திட்டங்கள்

 

*நேரடி முதலீடு அனுமதியில் சிறப்பு திட்டங்கள்

 

*சில்லரை வர்த்தகம் தவிர அனைத்து துறைகளிலும் அன்னிய முதலீட்டுக்கு வழி

 

*அன்னிய முதலீடு மூலம் வேலைவாய்ப்பு பெருக்க திட்டம்

 

*எளிய வரிவிதிப்பு நடைமுறை

 

*நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு 8 வழிகள் வகுக்கப்பட்டுள்ளன

 

* வேளாண் சீர்திருத்தம்

 

*சிறுபான்மை நலன் பாதுகாப்பு

 

*மதரசாக்களை நவீனப்படுத்த திட்டம்

 

*கல்வி, வேலை வாய்ப்பில் சிறுபான்மையினருக்கு சலுகைகள்

 

*அனைத்து மாநிலங்களிலும் மகளிர் பாதுகாப்பு படை

 

*<உணவு பாதுகாப்பு திட்டம் மேலும் செம்மைப்படுத்தப்படும்

 

*ஊழல் தடுப்பு , விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த புதிய கொள்கை

 

*100 புதிய நகரங்கள், இரட்டை நகரங்கள், துணை நகரங்கள்

 

*அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம்

 

* சுகாதாரம் காத்திட முன்னுரிமைகள்

 

*நாடு முழுவதும் ஒரே விற்பனை வரி

 

*நிர்வாகம், நீதித்துறை, மறு சீரமைப்பு கொள்கை

 

*வீட்டுக்கு குடிநீர் வயலுக்கு தண்ணீர் வழங்கும் புதிய திட்டம்

 

*மத்திய – மாநில அரசு உறவுகள் பேணி காக்கப்படும்

 

*பல்கலை., கழகம் மானியக்குழு மறு சீரமைப்பு

 

*கடலேரா பகுதி வளர்ச்சிக்கு சாகர் மாலா திட்டம்

 

*விளை பொருட்கள் கொண்டு செல்ல விவசாய அக்ரி ரயில்

 

*நீதிதுறை, காவல் துறை, தேர்தல் கமிஷன் சீர்திருத்தம்

 

*ஆண்- பெண் உரிமையில் சம நிலை

 

*அயோத்தியில் அரசியல் சட்டத்திற்குட்பட்டு ராமர் கோயில் கட்டப்படும்

 

*கிராமங்களில் வை-பை அறிமுகம்

 

*சார்க் மற்றும் ஏசியான் நாடுகள் இடையிலான உறவு பலப்படுத்தப்படும்

*வெளிநாடுகளில் இருக்கும் நமது இந்திய அதிகாரிகள் மதிப்பு காத்திட வழி

* இந்திய அளவில் உள்ள மொழிகள் மேம்படுத்தப்படும்

* மொழி மேம்பாடு மூலம் அறிவுத்திறøம் மேம்படுத்த வழி வகை

*அண்டைய நாடுகளுடன் நல்லுறவு

*எல்லை பிரச்னையில் கடும் நடவடிக்கை

* பசுக்கள் காத்திட சிறப்பு திட்டம்

*இயற்கை வளங்கள் பாதுகாப்பில் தேசிய கொள்கை

*இயற்கை வளங்கள் ஏலத்தில் இ- ஆக்ஷன்

*பயங்கவரவாத ஒழிப்பு கொள்கையில் மறு ஆய்வு

*தேசிய புலனாய்வு அமைப்பு பலப்படுத்தப்படும்

*போர் நினைவுச்சின்னம் எழுப்புதல்

*பாதுகாப்பு துறை பல்கலை., உருவாக்கப்படும்

*பாதுகாப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சித்துறை மேம்படுத்தப்படும்

 

* வாய்ப்பு உள்ள இடங்களில் நதிநீர் இணைப்பு

* கிராமங்கள் தோறும் கம்பியில்லா இணையதள சேவை

* காஷ்மீர் தன்னாட்சி அதிகாரம் ரத்து

*வரி என்ற பயங்கரவாதம் நீக்கப்படும்.

 

இது நாட்டிற்கு ஒரு நல்ல அறிகுறி : காங்., பா.ஜ., தேர்தல் அறிக்கை குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய்சிங் கூறுகையில், ‘பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் மதரசாக்களை நவீனப்படுத்துவோம் என கூறப்பட்டுள்ளது. இது நாட்டிற்கு ஒரு நல்ல அறிகுறியாகும்,’ ராமர் கோயில் விவகாரத்தை பா.ஜ., எப்போதும் அரசியலுக்காக கையில் எடுக்கும். கடந்த 2004ல் கோஷம் எழுப்பியது. ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் கை விட்டது. என்றார்.

 

பா.ஜ., தேர்தல் அறிக்கை குறித்து, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசுகையில், ‘தேர்தல் அறிக்கையை ஒரு சம்பரதாயமாக விட்டுவிடாமல், அதில் சொல்லி உள்ளதை எல்லாம் செய்வோம். எங்களின் லட்சியமே தேர்தல் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. நல்ல நிர்வாகத்திற்கும், வளர்ச்சிக்குமான வகையில் தேர்தல் அறிக்கை அமைக்கப்பட்டுள்ளது,’ என்றார்.

TAGS: