நாட்டின் பாதுகாப்பு பலவீனமானதற்கு அந்தோணி விளக்கம் அளிக்க வேண்டும்: நரேந்திர மோடி

 நாட்டின் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளது குறித்து நாட்டு மக்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளரான நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் கே.சுரேந்திரனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட மோடி கூறியதாவது:

பாதுகாப்புப் படைக்குத் தேவையான சிறந்த கருவிகள் கொள்முதல் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டது. ஆனால், அந்தச் செயலை பாகிஸ்தான் ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் புரிந்ததாக நாடாளுமன்றத்தில் அந்தோணி தெரிவித்தார். இது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு சாதகமாக அமைந்தது. இதற்காக அந்தோணிக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் புகழாரம் சூட்டின.

அந்தோணியின் இந்த அறிவிப்பினால், இந்திய வீரர்கள் அதிருப்தி அடைந்தனர். கேரள கடற்பகுதியில் இத்தாலிய கடற்படை வீரர்களால் இந்திய மீனவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாலிய கடற்படை வீரர்கள் எந்த சிறையில் அடைக்கப்பட்டனர் என்று அந்தோணியும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் தெரிவிக்க வேண்டும்.

பலவீனமான அரசு நமக்கு வேண்டாம். வலுவான அரசு அமைய வேண்டுமெனில், நீங்கள் 300-க்கும் மேற்பட்ட பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்.

இத்தேர்தல் முடிவில், காங்கிரஸ் நூறு தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. நாட்டில் 10 மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கேரளம் உள்பட காங்கிரஸ் ஆட்சி செய்யும் 6 மாநிலங்களும் அடங்கும். அப்பட்டியலில் பாஜக ஆளும் மாநிலங்கள் எதுவும் இல்லை.

சுற்றுலாத் துறையையும், ஆயுர்வேத மருத்துவத் துறையையும் முறையாகப் பயன்படுத்த கேரள அரசு தவறி விட்டது. மாநிலத்தில் உரிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படாததால், இளைஞர்கள் வேலைதேடி வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர். மாநிலத்தின் வளர்ச்சியில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பும் நிதி முக்கியப் பங்கு வகிக்கிறது.

செயற்கைக்கோள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீனவ சமுதாயத்துக்கு உதவும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காசர்கோடு பகுதியில் என்டோசல்ஃபான் பூச்சிக் கொல்லி மருந்தால் பாதிக்கப்பட்ட 50,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள், இளம் வயதிலேயே முதுமை அடைந்து விட்டனர். மத்திய, மாநில அரசுகளின் மெத்தனத்தால் அவர்களுக்கு தற்போதுவரை நிவாரணம் அளிக்கப்படவில்லை என்று மோடி தெரிவித்தார்.

TAGS: