கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்: உமாபாரதி

கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற “கங்கா மந்தன்’ நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணி தொடர்பாக பாஜக தேசிய கவுன்சில் குழு கூட்டத்தில் பேசினேன். அப்போது அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தலைவர்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக தங்களது ஒரு கையை மட்டும் உயர்த்தினர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ தனது 2 கைகளையும் எனக்கு ஆதரவாக உயர்த்தினார். இதிலிருந்து அவர், கங்கை நதி மீது எவ்வளவு ஈடுபாடு கொண்டுள்ளார் என்பதை புரிந்து கொண்டேன்.

கங்கோத்ரி முதல் கங்கா சாகர் வரை தடையின்றி கங்கை நதி தொடர்ந்து பாய்வதை மத்திய அரசு உறுதி செய்யும். கங்கை நதியை சுத்தப்படுத்துவது குறித்து பல்வேறு தரப்பினரிடம் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் அதுதொடர்பான திட்டம் அறிவிக்கப்படும். அந்த திட்டத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு அளிக்கும்’ என்றார்.

TAGS: