நக்ஸலைட்டுகளை ஒடுக்க புதிய திட்டம்: ராஜ்நாத் சிங்

நக்ஸலைட்டுகளை ஒடுக்க விரிவான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற மாநில காவல்துறை பயிற்சி அகாதெமி தலைவர்கள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

தீவிரவாதத்தாலும், மாவோயிஸ்டுகளாலும், கிளர்ச்சியாளர்களாலும் பல்வேறு சவால்கள் ஏற்பட்டு வருகின்றன. அத்தகைய சவால்களை முறியடிக்க வேண்டும். இதற்காக, நமது வலைதளத்தில் உங்களுடைய ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

இது தொடர்பாக, பணியில் உள்ள அதிகாரிகளிடமும், ஓய்வுபெற்ற அதிகாரிகளிடமும் ஆலோசனைகளை பெற்றிருக்கிறேன். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான ஒரு விரிவான திட்டம் ஏறக்குறைய தயாராகி விட்டது.

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை: பாகிஸ்தான் தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருகிறது. இதனை அந்நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா போர்நிறுத்த ஒப்பந்தத்தை எப்போதும் மீறியதில்லை என்றார் ராஜ்நாத் சிங்.

TAGS: