எல்லைப் பிரச்னைக்கு முன்னுரிமை: சீன அதிபரிடம் மோடி வலியுறுத்தல்

  • ModiXiJinping--621x414
    தில்லி ஹைதராபாத் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்.

இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினரின் ஊடுருவல்கள் தொடர்வது தீவிர கவனத்துக்குரிய பிரச்னை என்று அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்குடன் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார். இரு நாட்டு எல்லைப் பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து, விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளிடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை குஜராத் மாநிலம் ஆமதாபாதில் புதன்கிழமை வரவேற்ற மோடி, சபர்மதி ஆசிரமம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளை சுற்றிக் காண்பித்தார். அதன் பின், இரு தலைவர்களும் தில்லியில் வியாழக்கிழமை விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 3 மணிநேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் தலைவர்களின் தனிப்பட்ட சந்திப்பு, இரு தரப்புப் பிரதிநிதிகளும் பங்கேற்ற ஆலோசனை ஆகிய இரண்டும் இருந்தன.

சீன ஊடுருவல் பிரச்னை: நரேந்திர மோடி-ஜீ ஜின்பிங் இடையிலான தனிப்பட்ட பேச்சுவார்த்தையில், எல்லையில் ஜம்மு-காஷ்மீரின் சுமர், தேம்சோக் பகுதிகளில் புதன்கிழமை இரவும் வியாழக்கிழமை அதிகாலையும் நீடித்த சில ஊடுருவல் சம்பவங்கள் குறித்த விவகாரமே முக்கிய இடம்பெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மோடி கூறியதாவது:

எல்லையில் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்கள் (ஊடுருவல்கள்) குறித்த நமது கவலையை நான் எழுப்பினேன். பரஸ்பர நம்பிக்கைக்கு எல்லையில் அமைதி நிலவுவது அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். இந்த விஷயம் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.

நடைமுறை எல்லைக்கோடு தொடர்பாக விளக்கமளிக்கப்படுவது, அமைதியைப் பராமரிப்பதற்கான நமது முயற்சிகளுக்குப் பெரும் உதவிகரமாக அமையும் என்று நான் ஆலோசனை கூறினேன். பாதியில் நின்றுபோன, நடைமுறை எல்லைக்கோட்டைத் தெளிவுபடுத்தும் முயற்சியை மீண்டும் தொடங்குமாறு அதிபர் ஜீ ஜின்பிங்கை நான் கேட்டுக் கொண்டேன். எல்லைப் பிரச்னைக்கும் நாம் விரைவில் தீர்வு கண்டாக வேண்டும். சீனாவின் விசா கொள்கை, எல்லை தாண்டிய நதிகள் ஆகியவை தொடர்பான இந்தியாவின் கவலைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்தப் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதன் மூலம் பரஸ்பர நம்பிக்கையை புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்ல முடியும் என்று நம்புகிறேன்.

இரு நாடுகளிடையே அனைத்து நிலைகளிலும் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்துவது என்றும், உச்சிமாநாடு நிலையிலான சந்திப்புகளை அடிக்கடி நடத்துவது என்றும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்குவது என்றும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்த ஆண்டுக்குள் முதல்கட்ட கடல்சார் ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தையை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது என்றார் மோடி.

சீன அதிபரின் விளக்கம்: அதைத் தொடர்ந்து, ஜீ ஜின்பிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இரு நாடுகள் இடையிலான எல்லை இன்னும் சரியாக வரையறுக்கப்படாததால், அங்கு சில நேரங்களில் சில சம்பவங்கள் (ஊடுருவல்கள்) நடைபெறலாம். ஆனால், எல்லை தொடர்பான பல்வேறு நிலைகளிலான அமைப்புகள் மூலம் உரிய வகையில் நடவடிக்கை எடுப்பதற்கும், நிலைமையைத் திறம்பட நிர்வகிப்பதிலும் இரு தரப்பும் முனைப்புடன் உள்ளன. இது போன்ற சம்பவங்கள், இரு தரப்பு உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எல்லைப் பிரச்னைக்கு நட்புரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் விரைவில் தீர்வு காண்பதற்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா உறுதிபூண்டுள்ளது.

இந்தியாவும், சீனாவும் ஒன்றுக்கொன்று முக்கியமான அண்டை நாடுகளாகும். இரு நாடுகள் இடையே சில முக்கியமான பிரச்னைகள் உள்ளன. பரஸ்பர நல்லுறவுச் சூழலில் மேற்கண்ட பிரச்னைகளைத் தீர்க்க இரு தரப்பும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றார் ஜீ ஜின்பிங்.

12 ஒப்பந்தங்கள் கையெழுத்து

மோடி-ஜீ ஜின்பிங் இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்தியாவில் சீனத் தொழில் பூங்காக்களை அமைப்பது, ரயில்வே துறையில் சீன முதலீடு உள்பட இரு நாடுகள் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முதலீடு தொடர்பான ஒப்பந்தத்தில் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், சீன வர்த்தகத் துறை அமைச்சர் காவ் ஹூசெங்கும் கையெழுத்திட்டனர். அதன்படி, இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 2,000 கோடி அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.22 லட்சம் கோடி) சீனா முதலீடு செய்ய உள்ளது.

இது தவிர, ஆடியோ-விடியோ நிகழ்ச்சிகளைக் கூட்டாகத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், சீன பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி நிர்வாகமும் கையெழுத்திட்டன. விண்வெளித் துறையில் ஒத்துழைப்பு, இரு நாடுகளின் கலாசார நிறுவனங்கள் இடையிலான ஒத்துழைப்பு, மருந்துத் துறை, மும்பை-ஷாங்காய் இடையே சகோதர நகர உறவை ஏற்படுத்துவது, ஆகியவை தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

கைலாச மானசரோவர் யாத்திரையை மேற்கொள்ளும் இந்திய பக்தர்கள் சிக்கிமின் நாதுலா கணவாய் வழியாக செல்வதற்கான ஒப்பந்தத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியும் கையெழுத்திட்டனர்.

இரு தரப்பு பொருளாதார உறவுகள்: இரு தரப்பு பொருளாதார உறவுகள் குறித்து, செய்தியாளர்களிடம் மோடி கூறியதாவது:

சீனாவில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்யவும், பொருள்களைச் சந்தைப்படுத்தும் சூழலை மேம்படுத்தவும் உதவுமாறு அதிபர் ஜின்பிங்கைக் கேட்டுக் கொண்டேன். இதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

இந்தியா-சீனா இடையிலான பொருளாதார உறவுகளுக்கு அதிபர் ஜீ ஜின்பிங்கின் பயணம் வரலாற்று வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன் மூலம், நமது உறவுகளில் புதிய சகாப்தத்தைத் தொடங்க முடியும் என்றார் மோடி.

மோடிக்கு ஜீ ஜின்பிங் பாராட்டு: ஜீ ஜின்பிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், “”மோடியுடன் நான் நடத்திய பேச்சுவார்தை பலனளிக்கும் வகையில் அமைந்திருந்தது. அடுத்த ஆண்டில் சீனாவுக்கு வருமாறு அவரை அழைத்துள்ளேன். அவரது தலைமையின் கீழ் இந்தியா, வளர்ச்சியில் புதிய உச்சங்களை எட்டும்” என்று தெரிவித்தார்.

லடாக்கில் பதற்றம்: விரைந்தது இந்திய ராணுவம்

இந்தியாவில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் தற்போது அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், எல்லையைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் குவிக்கப்படும் நிலை வியாழக்கிழமையும் தொடர்ந்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து நிலைமையைச் சமாளிக்கும் விதத்தில் அந்தப் பகுதிக்குக் கூடுதலாக இந்தியத் துருப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய இந்தியப் பகுதியான லடாக்கின் தென்கிழக்கே சுமார் 300 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சுமர் என்ற கிராமப்புறத்தில் சீன ராணுவத்தினர், கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்ததை இந்திய வீரர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற இந்திய வீரர்கள், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சீனப் பணியாளர்களைத் தடுத்து எச்சரித்து அனுப்பினர். இருப்பினும், அந்தப் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட சீனத் துருப்பினர் பதுங்கியிருப்பதாகவும், அவர்களுக்கு அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, லடாக்கின் மற்றொரு பகுதியான தேம்சோக் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சீனப் பழங்குடியினர் இந்தியப் பகுதிக்குள் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு அத்துமீறி நுழைந்து கூடாரங்களை அமைத்துள்ளனர். அந்தச் சீனப் பழங்குடியினர் அனைவரையும் உடனடியாக அங்கிருந்து திரும்பிச் செல்லுமாறு இந்திய வீரர்கள் எச்சரித்தனர். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து லடாக் பகுதியில் இந்திய வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். சீன எல்லைப் பகுதியிலும் அந்நாட்டு வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது 3 நாள் அரசுப் பயணமாக சீன நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையிலும் லே பகுதியில் நம் நாட்டு எல்லையைத் தாண்டி புதன்கிழமையும், வியாழக்கிழமை அதிகாலையிலும் நூற்றுக்கணக்கான சீன ராணுவத்தினர் ஊடுருவியதாகத் தகவல் வெளியாகியுள்ளதால் அங்கும் பதற்ற நிலை உருவாகியுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

TAGS: