நாட்டின் பாதுகாப்புக்கே முன்னுரிமை; கூட்டணிக்கு அல்ல

“”நாட்டின் பாதுகாப்புக்கே மத்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது; ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் கூட்டணி அரசில் நீடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஜம்மு – காஷ்மீரில் ஹுரியத் பிரிவினைவாத தலைவர் மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பி வருகின்றன. இதேபோல், ஜம்மு-காஷ்மீர் அரசு மேலும் 800 பிரிவினைவாதிகளை விடுதலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாதில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தேசப் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய பாஜக அரசு எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது. எந்த அரசாக இருந்தாலும் சரி, அந்த அரசில் நாங்கள் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம். நாட்டுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்போம்.

ஜம்மு-காஷ்மீர் ஹுரியத் பிரிவினைவாதத் தலைவர் மஸரத் ஆலம் விடுதலை விவகாரம் தொடர்பாக தற்போது எதையும் தெரிவிக்க விரும்பவில்லை. எனது விளக்கத்தை நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்து விட்டேன். மஸரத் ஆலம் விடுதலை குறித்து ஜம்மு-காஷ்மீர் அரசிடம் கூடுதல் விளக்கம் கேட்டுள்ளேன்.

அதுகுறித்து மாநில அரசின் பதில் கிடைத்ததும், மேற்கொண்டு எனது கருத்தைத் தெரிவிப்பேன்.

மஸரத் விடுதலை தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீது என்னுடன் பேசவில்லை. இப்போது மட்டுமல்ல, கடந்த 3 ஆண்டுகளாகவே, அவருடன் (முஃப்தியுடன்) நான் பேசவில்லை என்றார் ராஜ்நாத் சிங்.

பாஜக தாக்கு: இதனிடையே, மஸரத் ஆலம் விடுதலை உள்ளிட்ட விவகாரங்களில், மென்மையான கொள்கையைக் கடைபிடிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக தெரிவித்தது. இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகிய விவகாரங்களை பாஜக சகித்துக் கொண்டிருக்காது. இந்த விவகாரங்களில், மென்மையான போக்கையும், பலவீனமான கொள்கையையும் கடைப்பிடிப்பதை பாஜக அனுமதிக்காது. மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விதத்தில் பாஜகவுக்கு உடன்பாடு கிடையாது. இதை பாஜக எதிர்க்கிறது. இது தவறான நடவடிக்கையாகும்.

இந்த விவகாரத்தை, மத்திய உள்துறை அமைச்சர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அரசமைப்பு சட்டத்துக்கு உள்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம்: பிடிபி

ஜம்மு, மார்ச் 10: அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு ஜம்மு-காஷ்மீர் அரசு செயல்படும் என்று பிடிபி கட்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுதொடர்பாக ஜம்முவில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான இம்ரான் ராசா அன்சாரி கூறுகையில், “உச்ச நீதிமன்றமும், நீதிமன்றங்களும் என்ன உத்தரவுகளை பிறப்பிக்கிறதோ, அதற்கு கட்டுப்பட்டு செயல்படுவோம்’ என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவுடனோ, மத்திய அரசுடனோ விவாதம் நடத்தப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “நீதிமன்ற உத்தரவை நாங்கள் செயல்படுத்தினோம்’ என்றார்.

-http://www.dinamani.com

TAGS: